மோடி, அத்வானியை எப்படி விமர்சிக்கலாம்? பத்திரிகையாளரின் காரை விரட்டிவிரட்டி தாக்கிய பாஜகவினர்! ஷாக்
மும்பை: பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குறித்து விமர்சனம் செய்த பத்திரிகையாளர் நிகில் வாக்லேவின் காரை விரட்டி சென்று கண்ணாடியை அடித்து உதைத்து காரின் மீது மை ஊற்றிய பாஜகவினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே. இவர் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகடி கூட்டணிக்கு (உத்தவ் தாக்கரே அணி + தேசியவாத காங்கிரஸ் + காங்கிரஸ்) ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவித்தார். இந்த விருது அறிவிப்பையும் நிகில் வாக்லே கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவருக்கு பாரத் ரத்னா வழங்குவதை எப்படி ஏற்க முடியும்? எனும் வகையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதோடு பிரதமர் மோடி, மற்றும் அத்வானியை அவர் விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் நேற்று இரவு பத்திரிகையாளர் நிகில் வாக்லே தனது காரில் புனேவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த வேளையில் அவரது காரை பின்தொடர்ந்து சென்ற சிலர் கண்ணாடிகளை உடைத்தனர்.
அதோடு காரை மொத்தமாக சூழ்ந்து கொண்டனர். இதனால் கார் மெதுவாக நகர்ந்தது. இந்த வேளையில் மேலும் காரின் மேல்பகுதியில் மை ஊற்றினர். அதோடு தொடர்ந்து காரை பின்தொடர்ந்து கண்ணாடிகளை அடித்து உதைத்தனர். பிரதமர் மோடி, அத்வானி குறித்து விமர்சித்ததால் இந்த தாக்குதலை பாஜகவை சேர்ந்தவர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு உத்தவ் தாக்கேரேவின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வந்து பாஜகவினரிடம் வாக்குவாதம் செய்து அவரை மீட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி நிகில் வாக்லே கூறுகையில், ‛‛என்னை தாக்கியவர்களை நான் மன்னிக்கிறேன். இதற்கு முன்பு நான் 6 முறை தாக்கப்பட்டேன். இது 7 வது முறையாகும். வரும் தேர்தலில் மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.
முன்னதாக பிரதமர் மோடி மற்றும் அத்வானி குறித்து புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர் சுனில் தியாதர் சார்பில் விஸ்ராம்பாக் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரில் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ (இருபிரிவினர் இடையே பகையை ஊக்குவித்தல்), 500 (அவதூறு பரப்புதல்), 505 (பொது அமைதியை சீர்க்குலைக்கு கருத்து தெரிவித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் நிகில் வாக்லேவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உண்மையிலேயே பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் குரல் நெரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். இது தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது ஆபத்தானது'' என்றார்.












Click it and Unblock the Notifications