நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்... நடிகை கங்கணா ரணாவத்துக்கு எச்சரிக்கை..!
மும்பை: பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் அடுத்த விசாரணைக்கு நடிகை கங்கணா ரனாவத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் முறையிலும் நடிகை கங்கணா ரணாவத் பேசியுள்ளதாக கூறி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் பனுசாலி, இதுவரை 8 முறை நடிகை கங்கணா ரனாவத் வாய்தா வாங்கியுள்ளதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தவறாமல் ஜாவேத் அக்தர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி நடிகை கங்கணா ரனாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள விவரத்தையும் கீழமை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நடிகை கங்கணா ரனாவத்தின் வழக்கறிஞர் சித்தீகி, கங்கணா தற்போது அவர் நடித்துள்ள பட புரோமோஷன் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும் இதனால் பல தரப்பட்டோரையும் சந்தித்ததால் அவர் கொரோனா சோதனைக்கு தன்னை உட்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
இதன் காரணமாகவே அவர் இன்றைய தினம் வழக்கு விசாரணக்கு வரமுடியவில்லை என்றும், கொரோனா சோதனை நெகட்டிவ் என முடிவு வந்துவிட்டால் நிச்சயம் அடுத்த விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் அடுத்த முறை கங்கணா ரனாவத் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகை கங்கணா ரனாவத்தை பொறுத்தவரை அதிரடியான கருத்துக்களை கூறக்கூடியவர். சில மாதங்களுக்கு முன்பாக மஹாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக அதிரடி கிளப்பி அரசியல் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இரவில் ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார்.. சிக்கலில் பாஜகவை சேர்ந்த நடிகை -கமிஷ்னருக்கு பறந்த பரபர புகார்