நிதின் கட்கரிக்கு சிக்கல்.. ஆர்எஸ்எஸ் தலைமையிடமான நாக்பூரில் வெல்லுமா பாஜக? ‛செக்’ வைத்த காங்கிரஸ்!
மும்பை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் லோக்சபா தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ளது. வரும் தேர்தலில் மீண்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பலமான விகாஷ் தாக்கரேவை களமிறக்கி உள்ளது. இதனால் நிதின் கட்கரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீண்டும் நிதின் கட்கரி ஜெயிப்பாரா? களநிலவரம் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நாம் இந்தியாவில் உள்ள நட்சத்திர தொகுதிகளில் நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் நட்சத்திர லோக்சபா தொகுதி தான் நாக்பூர். மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் ஒன்று நாக்பூர்.
மீண்டும் நிதின் கட்கரி: நாக்பூரில் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் உள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது பாஜகவின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் நிலையில் நாக்பூர் தொகுதியின் எம்பியாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளார். இவர் நாக்பூர் தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 3வது முறையாக அவர் நாக்பூர் தொகுதியில் களமிறங்கி உள்ளார். நாக்பூர் தொகுதிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கட்கரி நம்பிக்கை: இந்த தேர்தல் குறித்து நிதின் கட்கரி கூறுகையில், ‛‛நாக்பூரில் பாஜகவுக்கு 75 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். இதனால் எனது வெற்றியில் சந்தேகம் இல்லை. நாங்கள் இப்போது எங்களுக்கான ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க தான் பணியாற்றி வருகிறோம்'' என தெரிவித்தார். இதன்மூலம் நிதின் கட்கரி மீண்டும் 3வது முறையாக வெற்றி பெறுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்: இதற்கிடையே தான் மகாராஷ்டிராவில் ‛இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்தது. சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தனர். அதன்படி நாக்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் விகாஷ் தாக்கரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம் நாக்பூர் தொகுதியில் பாஜக - காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் பின்னணி: காங்கிரஸ் வேட்பாளரான விகாஷ் தாக்கரே தற்போது நாக்பூர் மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். மேலும் நாக்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் நாக்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் இதற்கு முன்பு நாக்பூர் மேயராகவும் பொறுப்பு வகித்தவர். இதனால் நாக்பூரில் நல்ல செல்வாக்கு உள்ளது.
பெரும் சவால்: இதனால் வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் நிதின் கட்கரிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. இதுபற்றி விகாஷ் தாக்கரே கூறுகையில், ‛‛நாக்பூரில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஓட்டு சதவீதம் உள்ளது. இதனால் நிதின் கட்கரியை பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்துவேன்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவின் பலம் என்ன: நாக்பூர் தொகுதி ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1977 முதல் 2009 வரை (1996ல் மட்டும் பாஜக) அனைத்து தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2014, 2019 தேர்தல்களில் நிதின் கட்கரி வெற்றி பெற்றார். இது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. மேலும் நாக்பூர் என்பது ஆர்எஸ்எஸ் தலைமையகமாக உள்ளது. இது பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
மேலும் நாக்பூர் லோக்சபா தொகுதியில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நாக்பூர் தென்மேற்கு ( பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்), நாக்பூர் தெற்கு (பாஜக மோகன் மாதே), நாக்பூர் கிழக்கு (பாஜகவின் கிருஷ்ணா கோப்டே), நாக்பூர் மத்தியம் ( பாஜக விகாஷ் அம்பாரி) ஆகிய 4 தொகுதியில் பாஜகை சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாக்பூர் மேற்கு (காங்கிரஸ் - விகாஷ் தாக்ரே), நாக்பூர் வடக்கு (நிதின் ராவத் ) ஆகிய 2 தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் வசம் உள்ளது. இது பாஜகவுக்கு பாசிட்டவாக உள்ளது.
இதுதவிர நாக்பூர் மக்களிடம் நிதின் கட்கரியிடம் நல்ல பெயர் உள்ளது. மேலும் நிதின் கட்கரி 2014ல் முதல் முதலாக நாக்பூர் தொகுதியல் போட்டியிட்டார். அப்போது 7 முறை காங்கிரஸ் எம்பியாக உள்ள விலாஸ் முட்டம்வாரை தோற்கடித்தார். நிதின் கட்கரி 5.87 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலைில் விலாஸ் முட்டம்வார் 3.01 லட்சம் ஓட்டுகள் வாங்கி தோற்றார். அதன்பிறகு 2019ல் நிதின் கட்காரி மீண்டும் போட்டிிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் நிதின் கட்கரி 6.60 லட்சம் ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நானா படோல் 4.44 லட்சம் ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் நிதின் கட்கரி 2 லட்சத்து 16 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் வென்று மத்திய அமைச்சரானார். 2014ம் ஆண்டை காட்டிலும் 2019ல் நிதின் கட்கரி கூடுதல் ஓட்டுகளை பெற்றார். இதுவும் பாஜகவுக்கு பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பலம் என்ன: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாக போட்டியிடும் விகாஷ் தாக்ரேவுக்கு நாக்பூர் பழக்கமான ஏரியா. இவருக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. மேலும் நாக்பூர் என்பது விதர்பா பிராந்தியத்தில் வருகிறது. இந்த பிராந்தியத்தில் குன்பி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 50 - 60 சதவீதம் அளவுக்கு வசித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான விகாஷ் தாக்ரே இந்த சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் குன்பி சமுதாயத்தை சேர்ந்தவர் மாரத்தா இடஒதுக்கீடு விஷயத்தில் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சி குன்பி சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக களமிறக்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவாரிடம் இருந்து பறித்தது, சிவசேனாவை உத்தவ் தாக்கரேவிடம் இருந்தது பறித்தது உள்ளிட்டவற்றால் சில இடங்களில் அனுதாப அலை உள்ளது. இது அவர்களுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு உதவலாம். மேலும் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சிவசேனா , பாஜக கூட்டணி அமைத்து இருந்தது. தற்போது சிவசேனாவில் உத்தவ் அணி காங்கிரஸ் கட்சியின் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளது.
இதனால் வரும் லோக்சபா தேர்தலில் நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நிதின் கட்கரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் விகாஷ் தாக்ரே இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போது பாஜக கோட்டையை நாக்பூரில் இடித்து காங்கிரஸ் கட்சி வெல்வது சிரமம் என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி நிதின் கட்கரியை, விகாஷ் தாக்ரேவால் வீழ்த்த முடியும் என நம்பிக்கை வைத்துள்ளது. அரசியல் எதுவும் நடக்கலாம் என்பதால் நாக்பூரில் மீண்டும் நிதின் கட்கரி வெல்வாரா? இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் விகாஷ் தாக்ரே வெற்றி பெறுவாரா? என்பதை அறிய நாம் ரிசல்ட் நாளான ஜுன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசிமாகும்.












Click it and Unblock the Notifications