லவ் ஜிஹாத்- கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரும் மகாராஷ்டிரா அரசு! ஆய்வு குழு அமைத்தது!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் லவ் ஜிஹாத் (Love Jihad) எனப்படும் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தும் நிலையில் மகாராஷ்டிரா அரசு, கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டுவர இருக்கிறது.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது. நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மகாராஷ்டிரா மாநில அரசு, கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதாவது இந்து மதப் பெண்களை திருமணம் செய்து பின்னர் இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதம் மாற்றம் செய்கின்றனர்; இந்த லவ் ஜிஹாத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநில அரசு, கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
கட்டாய மத மாற்றத் தடை சட்டம் தொடர்பான ஆய்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக மகாரஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், லவ் ஜிஹாத் மற்றும் கட்டாய மத மாற்றம் தொடர்பான புகார்களை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது; இது தொடர்பான பரிந்துரைகளை 7 பேர் கொண்ட ஆய்வுக் குழு பரிந்துரைக்கும். மேலும் பிற மாநிலங்களில் லவ் ஜிஹாத், மத மாற்றத் தடை சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இந்த ஆய்வுக் குழு ஆராயும். இவற்றின் அடிப்படையில் புதிய சட்டம் எப்படி கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை இந்த ஆய்வுக் குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications