மகாராஷ்டிரா தேர்தல்: 38 வேட்பாளர்களுடன் முதல் கட்ட பட்டியல் வெளியிட்ட அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 38 வேட்பாளர்களை அறிவித்துள்ளார் துணை முதல்வர் அஜித்பவார். தேசியவாத காங்கிரஸ் முதல் கட்டமாக வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் துணை முதல்வர் அஜித்பவார், பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளிடையே வலுவான போட்டி நிலவுகிறது. மகாயுதி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. பாஜக 156 தொகுதிகளிலும் ஷிண்டே சிவசேனா கட்சி 78 தொகுதிகளிலும் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பாஜக, சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸின் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை துணை முதல்வர் அஜித்பவார் இன்று அறிவித்தார். பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித் பவார் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அஜித்பவாரின் அண்ணன் மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார்.
இந்த பட்டியலில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் பெயர் இடம்பெறவில்லை. நவாப் மாலிக், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்பதால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தரக் கூடாது என வலியுறுத்தி வருகிறது பாஜக. தற்போது வெளியான முதல் பட்டியலில் நவாப் மாலிக் பெயர் இடம் பெறவில்லை. 2-வது கட்ட பட்டியலில் நவாப் மாலிக் பெயர் இடம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மகா விகாஸ் அகாடி தொகுதி பங்கீட்டு முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications