மகாராஷ்டிரா: இந்தியா கூட்டணி உடையும்.. பாஜக கனவை சுக்கு நூறாக்கிய சரத்பவாரின் 85 சீட் பார்முலா
மும்பை : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் என இலவு காத்த கிளியாக காத்திருந்த பாஜகவுக்கு தற்போது சுமூகமான உடன்பாடு உருவாக்கி கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 3 கட்சிகளுமே தலா 85 தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி நடைபெறுகிறது. பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூகமான தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படுவதில் பெரும் சிக்கல் நீடித்தது. காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்தது. உத்தவ் சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் அதிகமான தொகுதிகளை வலியுறுத்தியது.
இதனால் மகா விகாஸ் அகாடியில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தி நிலவியது. இந்த அதிருப்தியை அறுவடை செய்யலாம் எனவும் பாஜக காத்திருந்தது. இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனாவை சரத்பவார் கழற்றிவிடுகிறார்; உத்தவ் சிவசேனா, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றெல்லாம் கதைகள் பரப்பிவிடப்பட்டன.
இந்த குழப்பமான சூழ்நிலையில் களமிறங்கினார் சரத்பவார். காங்கிரஸ் தலைவர் நானா படோல், உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோருடன் சரத்பவார் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மகா விகாஸ் அகாடியில் உள்ள 3 கட்சிகளுமே தலா 85 இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்பதுதான் அது. இதன் மூலம் 255 தொகுதிகளை 3 கட்சிகளும் சரி சமமாக பகிர்ந்து கொண்டுள்ளன. 18 தொகுதிகள் மகா விகாஸ் அகாடியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இருப்பினும் 15 தொகுதிகள் தொடர்பான இழுபறி நீடிக்கிறது. மும்பை பிராந்தியத்தில் உள்ள 3, விதர்பா பகுதியில் உள்ள 12 தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் 3 கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் 105; தேசியவாத காங்கிரஸ் 84; உத்தவ் சிவசேனா 95 இடங்களில் போட்டியிடுவது என்பதுதான் காங்கிரஸ் முன்வைத்த பார்முலா. தற்போது காங்கிரஸ் 85 இடங்களில் மட்டும் போட்டியிடும் என்பதால் பல காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி மேலிடத்தில் முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். 25 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாகப் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
இருப்பினும் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தால் கூட்டணி முறியக் கூடாது என்பதை ஹரியானா தேர்தலில் இருந்து பாடமாக கற்றுக் கொண்ட காங்கிரஸ் மேலிடம் தற்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால்தான் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலிலும் 2 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்க முன்வந்த போதும் கவுரவமாக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு ஆதரவு தருவதாக அறிவித்தது காங்கிரஸ் மேலிடம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications