ஜாதிவாரி கணக்கெடுப்பு-50% இடஒதுக்கீடு உச்சவரம்பு தகர்ப்பு.. மகாராஷ்டிராவில் ராகுல் அதிரடி வாக்குறுதி
மும்பை: நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கவும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை தகர்க்கவும் காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

மகா விகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது: நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலமாகும். இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலமே நமக்கான அதிகாரம் என்ன? அதிகாரத்தில் நமக்கான பங்கு என்ன என்பதும் தெரியவரும்.
நாட்டில் தற்போது இடஒதுக்கீடுக்கான உச்சவரம்பு 50% என்கிற ஒரு சுவர் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு சுவரை காங்கிரஸ் கட்சி தகர்த்து எறியும். நாட்டில் 90% உள்ள ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமாக காங்கிரஸ் கட்சி போராடுகிறது. அதானிகளின் நிர்வாகங்களில் தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களை எப்படி பார்க்க முடியும்? இந்த தேசத்தை 5% மக்கள்தானே வழிநடத்துகிறார்கள்? இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications