மகாராஷ்டிரா: கேப்டன் தமிழ்ச்செல்வன் vs கணேஷ்குமார்.. தமிழர்கள் மோதும் சயோன் கோலிவாடா நிலவரம் என்ன?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சயோன் கோலிவாடா சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் வேட்பாளராக தமிழர் கணேஷ்குமார் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் சயான் கோலிவாடா தொகுதியின் தேர்தல் முடிவை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் தமிழர்களை அதிகமாக கொண்ட தொகுதி சயோன் கோலிவாடா . இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,56,232; பெண் வாக்காளர்கள் 1,26,961. கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் 54,845 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கணேஷ்குமார் 40,894 வாக்குகளையும் பெற்றனர். கேப்டன் தமிழ்ச்செல்வன், இந்த தொகுதியில் 2 முறை வென்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். தற்போது 3-வது முறையாக களம் காண்கிறார். கேப்டன் தமிழ்ச்செல்வனை எதிர்த்து மீண்டும் தமிழரான கணேஷ்குமார் களத்தை சந்திக்கிறார்.

இந்த தொகுதியில் போட்டியிடும் கேப்டன் தமிழ்ச்செல்வன் கூறுகையில், சயோன் கோலிவாடா தொகுதியின் அடிப்படையான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 10 ஆண்டுகாலமாக தொடர் நடவடிக்கை எடுத்துள்ளேன். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளேன் என்கிறார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரான கணேஷ்குமார், 10 ஆண்டுகளாக எந்த ஒரு திட்டமுமே சயோன் கோலிவாடா தொகுதி மக்களுக்கு கிடைக்கவே இல்லை என்கிறார். இந்த தொகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்தான் பிரதான பிரச்சனையாக இருந்து வருகிறது.
சயோன் கோலிவாடா தொகுதியில் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவின் சஞ்சய் பிரபாகர் போகலே உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இத்தொகுதியில் 3-வது முறையாக கேப்டன் தமிழ்ச்செல்வனே வாகை சூடி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? அல்லது மாற்றத்தை விரும்பி காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ்குமார் வெல்வாரா? என்பதை மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications