மகாராஷ்டிரா: மீண்டும் மராத்தா ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்!
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதி என்ற பிரிவின் கீழ் பல்வேறு சமூகங்கள் இடம் பெற்றுள்ளன. மண்ணின் பூர்வகுடிகளான மராத்தா மக்களுக்கான இடஒதுக்கீடுப் போராட்டம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.

மராத்தா இடஒதுக்கீடுப் போராட்டத்தில் ஏராளமானோர் மரணம் அடைந்துள்ளனர். தற்கொலை செய்தும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து
2018-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில அரசு மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியது. ஆனால் இந்த சட்டம் மும்பை உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் எதிர்கொண்டது. இறுதியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு மராத்தா இடஒதுக்கீட்டு சட்டத்தையே ரத்து செய்தது. மராத்தா இடஒதுக்கீடு என்பதே அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
இதனையடுத்தும் மராத்தா போராட்டங்கள் தொடர்ந்து வெடித்தன. அண்மையில் மனோஜ் தாரங்கே என்பவர் தலைமையில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் மீண்டும் உயிர் பெற்றது. இது மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது.
இதனால் மராத்தா ஜாதியினரின் நிலைமை பற்றி நீதிபதி சுனில் சுக்ரி தலைமையிலான மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு நடத்தி தமது அறிக்கையை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கொடுத்தது. மொத்தம் 9 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மராத்தா ஜாதியைச் சேர்ந்த 2.5 கோடி குடும்பங்களில் அவர்களது நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைதான் மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று மராத்தா ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கான மசோதாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இம்மசோதா மீது விவாதங்கள் நடைபெற்று பின்னர் ஒரு மனதாக மராத்தா இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications