ராகுல் காந்திக்கு 'இந்துத்துவா' கோஷ்டிகள் குறி! நாக்குக்கு சூடு போடுங்க..பாஜக எம்.பி வெறிப் பேச்சு!
மும்பை: இடஒதுக்கீடு குறித்து பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாக்கை வெட்டுவோம் என சிவசேனா எம்.எல்.ஏ. கெய்க்வாட் பேசியது தவறு; அதற்கு பதிலாக ராகுல் காந்தியின் நாக்கில் சூடு போட வேண்டும் என மகாராஷ்டிரா பாஜக எம்பி அனில் போந்தே அதிர்ச்சியளிக்கும் வகையில் வெறித்தனமாக பேசியிருக்கிறார். அனில் போந்தே எம்பியின் இந்த வெறித்தனமான பேச்சுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகுமானால் இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் போகும் என தெரிவித்திருந்தார். ஆனால் வழக்கம் போல ராகுல் காந்தியின் பேச்சை பாஜக திரித்துவிட்டனர். இந்தியாவில் இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என ராகுல் காந்தி பேசிவிட்டதாக இந்துத்துவா அமைப்புகள் குறிவைத்து தாக்குகின்றன.

இதன் உச்சமாக, ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் ரூ11 லட்சம் பரிசு தருவேன் என மகாராஷ்டிராவின் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ.கெய்க்வாட் பேசியிருந்தார். இது தொடர்பாக போலீசில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் கொடுத்தனர். இதனால் கெய்க்வாட் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக மகாராஷ்டிரா பாஜக எம்பி அனில் போந்தே, ராகுல் காந்தியின் நாக்கை வெட்ட வேண்டும் என பேசியது தவறு. அப்படி எல்லாம் செய்யக் கூடாது. பொதுவாக யாராவது தவறாக பேசினால் நாக்கில் சூடு போடுவது வழக்கம். அதுபோல ராகுல் காந்தியின் நாக்கிலும் சூடு போட வேண்டும். மக்கள் உணர்வுகளை காயப்படுத்துகிற யாராக இருந்தாலும் அவர்களது நாக்கில் சூடு போடத்தான் வேண்டும் என பேசி அதிர்ச்சியளித்திருந்தார். பாஜக எம்பி அனில் போந்தே பேச்சுக்கு சிவசேனா தலைவரான முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது அனில் போந்தே எம்பி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தியை இந்துத்துவா அமைப்புகள் குறி வைத்து தாக்குவதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், பாஜக தலைவர் ஒருவர் ராகுல் காந்தி பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும் எனவும், ஷிண்டே சேனாவின் எம்.எல்.ஏ ஒருவர் ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்குப் பரிசு எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. எனது சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்குக் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். என வலியுறுத்தி இருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அத்தனை அரசியல் கட்சிகளும் இடஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications