மகாராஷ்டிரா அரசியலில் 'நவாப் மாலிக் புயல்'!பாஜக-அஜித் பவார் என்சிபி இடையே கடும் மோதல்- நடந்தது என்ன?
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் பாஜக- அஜித் பவார் என்சிபி இடையே பெரும் புயலாக உருவெடுத்துள்ளார் நவாப் மாலிக்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸை உடைத்து அஜித்பவார் ஆகியோரை இணைத்து பாஜக ஆட்சியில் உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்தால் சிறைவாசம் அனுபவித்தார். அவருக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நவாப் மாலிக் பங்கேற்றார். சட்டசபையில் அஜித் பவார் தலைமயிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்.எல்.ஏக்களுடன் ஆளும் கட்சி தரப்பு பக்கம் நவாப் மாலிக் அமர்ந்திருந்தார். இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், நவாப் மாலிக் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. அந்த வழக்கில் நவாப் மாலிக் தம் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கவும் இல்லை. தற்போது ஜாமீனில்தான் நவாப் மாலிக் வந்துள்ளார். அப்படியான நிலையில் நவாப் மாலிக்கை ஆளும் தரப்பில் இணைத்துக் கொள்ள கூடாது என தேவேந்திர பட்னாவிஸ் எழுதியுள்ளார்.
இது அஜித் பவார் என்சிபி தரப்பை ரொம்பவே கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே நவாப் மாலிக்கை முன்வைத்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. தற்போது நவாப் மாலிக் ஆளும் கட்சி பக்கத்தில் இணைந்திருப்பது பாஜகவை ரொம்பவே அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதனால் பகிரங்கமாகவே கடிதம் அனுப்பி இருக்கிறார் பட்னாவிஸ்.
ஏற்கனவே அஜித் பவார் என்சிபியை ஆளும் தரப்பில் இணைத்துக் கொண்டதை ஏக்நாத் ஷிண்டே சிவசேனா விரும்பவில்லை. ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் தரப்புகளுக்கு இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் நவாப் மாலிக் விவகாரம் மகாராஷ்டிராவில் ஆளும் கட்சிகளிடையே பெரும் புகைச்சலை உருவாக்கி இருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications