ஓபிஎஸ் போல பாஜகவை நம்பி நடுத்தெருவுக்கு வரும் மகாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டே! ராஜ்தாக்கரே மூலம் ஸ்கெட்ச்
மும்பை: தமிழ்நாட்டில் பாஜகவை மலைபோல நம்பி லோக்சபா தேர்தல் களத்தில் கழற்றிவிடப்பட்டவர்கள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, முன்னாள் எம்பி சசிகலா புஷா. இதே பாணியில் மகாராஷ்டிராவில் முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பாஜக மேலிடமே ஸ்கெட்ச் போட்டிருப்பதாக வெளியாகும் தகவல்களால் அம்மாநில அரசியல் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
பாஜகவைப் பொறுத்தவரை தேர்தல் அரசியலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதுதான் இலக்கு. எத்தனை கட்சிகள் இல்லாமல் போனாலும் அழிக்கப்பட்டாலும் பாஜக அதிகாரத்தில் இருக்க வேண்டும்; இதற்காக எத்தனை அரசியல் பலியாடுகள் சிக்கினாலும் பரவாயில்லை என்பது அரசியல் கோட்பாடாகவே நிலைபெற்று விட்டது.

ஓபிஎஸ், விஜயதாரணி கதி: தமிழ்நாட்டில் பாஜகவை மிகவும் நம்பியவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது ஓபிஎஸ் கை கழுவப்பட்ட நிலையில் செல்லும் பாதை எது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி, ஏதோ ஒரு நம்பிக்கையில் பாஜகவுக்கு ஓடினார். ஆனால் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை; விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன மாஜி மேயர், மாஜி எம்பி சசிகலா புஷ்பா கதியும் இதுதான்.
பரிதாப ஏக்நாத் ஷிண்டே: இதேபோல மகாராஷ்டிராவில் பாஜகவுக்காக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து சுக்கு நூறாக்கியவர் ஏக்நாத் ஷிண்டே. பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே சிவசேனா ஆதரவு தர, அவருக்கு முதல்வர் பதவியையும் கூட கொடுத்து அழகு பார்த்தனர். இப்போது பாஜகவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு வைக்க ரெடியாகிவிட்டது என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
ராஜ்தாக்கரே: மகாராஷ்டிராவில் பாஜக தம்மை வலுவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இதற்காக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்க்கரேவை வளைத்துப் போடும் முயற்சியில் படுதீவிரமாக இறங்கிவிட்டது பாஜக. டெல்லியில் அண்மையில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை ராஜ்தாக்கரே சந்தித்து பேசியிருந்தார். லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக்கு அப்பால் செம்ம ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறது பாஜக என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாஜகவின் ஸ்கெட்ச்: சிவசேனாவை உருவாக்கியவர் பால் தாக்கரே. பால் தாக்கரே குடும்பத்துக்கு என தனிப்பட்ட செல்வாக்கு மகாராஷ்டிரா அரசியலில் இப்போதும் உண்டு. இந்த செல்வாக்கைத்தான் உத்தவ் தாக்கரே குடும்பம் அறுவடை செய்து வருகிறது. இதனை காலி செய்வதற்காக, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் இணைக்க சொல்கிறது பாஜக. அத்துடன் அந்த சிவசேனாவுக்கு ராஜ்தாக்கரேவை தலைவராக்கி ஏக்நாத் ஷிண்டேவை மூலையில் உட்கார வைக்கவும் திட்டமிட்டுள்ளதாம் பாஜக. இப்போதைக்கு தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாதான் உண்மையான சிவசேனா என அங்கீகரித்துள்ளது. இந்த சிவசேனாவுக்கு பால் தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்தாக்கரே தலைவராக இருப்பதுதான் தங்களுக்கும் வலு சேர்க்கும் என்பதுதான் பாஜகவின் கணக்காம். இதற்கு ராஜ்தாக்கரே ஒப்புக் கொண்டதாகவும் இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ராஜ்தாக்கரே உள்ளே வரும் நிலையில் பாஜகவை நம்பி சொந்த கட்சியையே உடைத்து புது தலைவராக உருவெடுத்த ஏக்நாத் ஷிண்டே கதி அதோ கதிதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்! அந்தோ பரிதாபம்!












Click it and Unblock the Notifications