இந்துத்துவா, சாவர்க்கருக்கு பாரத ரத்னா.... சிவசேனா- காங். - என்சிபி புதிய அரசு முன் சவால்கள்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசியல் அத்தியாயத்தை காங்கிரஸ், சிவசேனா, என்சிபி கட்சிகள் தொடங்கி வைத்துள்ளன. ஆனால் இப்புதிய அத்தியாயம் 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் எனில் பல சவால்களையும் இம்மூன்று கட்சிகளும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் இருக்கின்றன.
1960களில் மராத்தி மராத்தியர்களுக்கே என்ற முழக்கத்துடன் களத்துக்கு வந்தது சிவசேனா.. இனவாத இயக்கமாக பார்க்கப்பட்ட சிவசேனா, காங்கிரஸின் பேராதரவுடன் அரசியலில் கால் பதித்தது.
ஆனால் பாஜகவுடன் சிவசேனா கை கோர்த்த போது இந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசுகிற ஒரு சங் அமைப்பாகத்தான் அது முன்னிறுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸிடம் இருந்து வெகுதொலைவில் விலகிப் போனது சிவசேனா.

1999-ல் என்சிபி
காங்கிரஸ் கட்சியின் இன்னொரு முகமாகத்தான் 1999-ல் தேசியவாத காங்கிரஸ் உருவானது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே கொள்கை வித்தியாசம் எதுவும் இல்லை. தற்போது இந்துத்துவா கொள்கையை மையமாக வைத்து வெகுதூரம் பயணித்துவிட்ட சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.

கடும் கொள்கை போக்கு இருக்காது?
என்னதான் இருந்தாலும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழே செயல்படுவோம் என்கிற உறுதிமொழி அடிப்படையில்தான் மூன்று கட்சிகளும் ஆட்சியை உருவாக்கி இருக்கின்றன. இதனால் சிவசேனா, ஆட்சிக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடிய கடும் போக்குகளில் தீவிரம் காட்டுமா? என்கிற கேள்வி எழுகிறது.

மும்பை பெருநகரம்
அதேநேரத்தில் என்சிபி-காங்கிரஸைப் போல இந்துத்துவாவின் மென்மை முக கட்சியாக, இனவாதம் பேசுகிற கட்சியாக பழைய நிலைமைக்கு திரும்புவது என்பது சிவசேனாவின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல என சுட்டிக்காட்டப்படுகிறது. மகாராஷ்டிரா என்பது பல மொழி, பல நாட்டவர் சங்கமிக்கும் பெருநகரமாக விரிந்து கிடக்கும் நிலையில் மராத்தி மராத்தியர்களுக்கே என்ற பகிரங்க முழக்கம் இப்போது கை கொடுக்க சாத்தியமில்லை.

இந்து வாக்கு வங்கி
மேலும் தமது இந்துத்துவா வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் காங்கிரஸ்- என்சிபிக்கும் உடன்பட்டதான இந்துத்துவா சார்பு நிலைப்பாடுகளை சிவசேனா பரீட்சார்த்த முயற்சியில் நேரடியாகவோ மறைமுகமாவோ இறங்கவும் வாய்ப்பிருக்கிறது. வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும்; அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்கிற விவகாரங்களில் காங்கிரஸ்-என்சிபியில் இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன.

சிவசேனா செயல் திட்டம்
இப்படியான பின்னணியில் காங்கிரஸ்- என்சிபியை சமாதானப்படுத்தும் வகையிலான மென்மையான இந்துத்துவா செயல்திட்டத்தை சிவசேனா செயல்படுத்த வேண்டிய நெருக்கடியிலும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது புதிய அரசுக்கான பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications