மராட்டிய பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்ட இந்தி மொழி! மாநில மொழிக் குழு கடும் எதிர்ப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து மராட்டிய பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அம்மாநிலத்தின் மாநில மொழிக் குழு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.
தேசிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழ காரணமே இந்த மொழி பிரச்சனைதான். ஆனால் மத்திய அரசு தரப்பில் இதற்காக பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மகாராஷ்டிரா சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

கடந்த 16ம் தேதி மகாராஷ்ரா மாநில அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது மகாராஷ்டிரா தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டது என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனையடுத்து 1-5ம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவின் மொழி ஆலோசனைக்குழு இந்த முடிவை கடுமையாக விமர்சித்திருக்கிறது.
"கல்வி ரீதியாக இந்த முடிவு சரியானது கிடையாது. மாணவர்களின் உளவியலுக்கு எதிரானதாக இது இருக்கிறது. அறிவியல் அடிப்படையற்றதாக இருப்பதால், இது மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தைதான் தரும். எனவே 12ம் வகுப்பு வரை 2 மொழிகள் மட்டுமே போதுமானது. இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது எங்களை ஆலோசித்திருக்க வேண்டும். 3 மொழிகளை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வதால், ஒரு மொழியை கூட முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகும்" என் கூறியுள்ளனர்.
ஆனால் மகாராஷ்ரா அரசு மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக பல்வேறு விளக்கங்களை கொடுத்திருக்கிறது. "மும்மொழிக்கொள்கை, இந்தி மூலம் மராட்டிய மொழி கட்டாயம் என்பதை மாற்ற முடியாது. தேசிய கல்விக்கொள்கை மூலம் 3 மொழிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். இதில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். எனவேதான் இந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்தோம். ஏனெனில் அதை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் எங்களிடம் இருக்கின்றனர்.
சில பள்ளிகளில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு இந்திய மொழிகளை கற்க விரும்பினால், உதாரணமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை கற்க விரும்பினால் அதற்காக ஆசிரியரை நியமிக்கவும் தாயாராக இருக்கிறோம். மாநிலங்களின் எல்லையில் உள்ள பள்ளிகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கின்றன" என்று மாநில அரசு விளக்கமளித்திருக்கிறது.
எது எப்படி இருப்பினும் மூன்றாது மொழி என்பது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ராவில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications