ஈர்த்த சனாதனம்.. ராமர் கதை கேட்டு இந்துவாக மாறிய மகாராஷ்டிரா முஸ்லீம் குடும்பம்.. மத குரு அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ராமர் கதை கேட்டு முஸ்லீம் குடும்பம் இந்துவாக மாறியுள்ளது. இதனை மதகுருவான தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபத்தில் சத்ரபதி சாம்பாஜி நகரில் அயோத்தியா நகரி மைதானம் அமைந்துள்ளது. இங்கு கடவுள் ராமரின் வாழ்க்கை குறித்த விஷயங்களை கதையாக எடுத்து கூறும் ‛ராமர் கதை' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 3 நாட்கள் நிகழ்ச்சி நடந்தது. அதில் ராமரின் பிறப்பு முதல் அவரது வாழ்க்கை அனைத்தையும் கதையாகவும், சொற்பொழிவாகவும் எடுத்து கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராமர் கதை என்ற பெயரில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்து சொல்லப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் இருந்து முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் வந்திருந்தனர்.
இவர்கள் ராமரின் வாழ்க்கை குறித்த கதை, சொற்பொழிவை கேட்டனர். அதன்பிறகு அவர்கள் முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினர். அவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரிலும், ராமர் கதையை கேட்ட பிறகும் இந்த முடிவை எடுத்து முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவியுள்ளனர். இதனை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பிரதேச மாநிலம் பகாஷ்வர் தாம் பீடத்தின் தலைவர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முன்னதாக தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, முஸ்லீம் குடும்பத்திடம், ‛‛இந்து மதத்துக்கு மாற யாராவது வற்புறுத்தினார்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த முஸ்லீம் குடும்பத்தின் ஜமீல் நிஜாம் செய்க் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‛‛குழந்தை பருவத்தில் இருந்தே சனாதன தர்மத்தை நான் பின்பற்றுகிறேன். பஜ்ரங்தளத்தின் உதவியோடு சாஸ்திரியை பின்பற்றி வருகிறோம். என்னையும், என் குடும்பத்தாரையும் மதம்மாற யாரும் வற்புறுத்தவில்லை'' என்றார்.
இதற்கிடையே இநு்த நிகழ்வுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பகவத் காரத் கூறுகையில், ‛‛முஸ்லீம் குடும்பம் இந்து மதத்துக்கு தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி நிகழ்ச்சியில் மாறியுள்ளனர். மேலும் மதம்மாற அழுத்தம் தரப்பட்டதா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என மறுத்துள்ளனர். அதோடு இந்த சம்பவத்துக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications