மகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி) தலைவர்கள் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டனர் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா பாஜகவில் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் ஒன்று சேர தொடங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டா தமது ஆதரவாளர்களை வரும் 12-ந் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனால் பங்கஜா முண்டே, பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் இணையக் கூடும் என கூறப்படுகிறது. அவருக்கு மற்றொரு மூத்த பாஜக தலைவர் ஏக்நாத் கட்சேவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏக்நாத் கட்சே கூறியதாவது:
பாஜகவில் ஓபிசி தலைவர்கள் மக்களின் பேராதரவு பெற்ற தலைவர்களாக உருவாகி விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஓபிசி தலைவர்களுக்கு எதிராக தேர்தலில் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓபிசி தலைவர்களை தோற்கடித்த பாஜக நிர்வாகிகளின் பட்டியலை கட்சித் தலைமைக்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிவசேனாவுடன் அடம்பிடிக்கும் போக்கை கடைபிடிக்காமல் இருந்திருந்தால் மகாராஷ்டிராவில் இப்போது பாஜக அரசாங்கம்தான் அமைந்திருக்கும். அத்தனை தோல்விகளுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்,
இவ்வாறு ஏக்நாத் கட்சே கூறினார்.












Click it and Unblock the Notifications