33 பேர் இல்லை.. அதுக்கும் மேலே.. குண்டை தூக்கி போடும் ஏக்நாத் ஷிண்டே.. மகாராஷ்டிரா அரசு கவிழ்கிறதா?
மகாராஷ்டிரா: சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று சிவசேனா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆளும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இவர் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சம் தொட்டுள்ளது. அங்கு சிவசேனா கட்சியை சேர்ந்த 33 எம்எல்ஏக்கள் ஆளும் மகா கூட்டணி எதிராக திரும்பி உள்ளதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாமில் தங்கி இருக்கிறார்.
போனை எடுத்த உத்தவ் தாக்கரே.. ஷிண்டேவுடன் சரமாரி பேச்சு.. 10 நிமிடம் பேசியது என்ன? மகா.வில் பரபரப்பு!
பாஜக எம்எல்ஏ
மகாராஷ்டிராவில் நடந்த மேலவை தேர்தலில் பாஜகவின் 5 எம்எல்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றது பெரிய சர்ச்சையானது. சில சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி பாஜக 5 எம்எல்சி இடங்களை பிடித்து இருக்க முடியாது. அப்போதே சிவசேனாவில் பாஜகவிற்கு ஆதரவான கருப்பு ஆடுகள் இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் திடீரென கட்சி கொறடாவாவும், அமைச்சராகவும் சிவசேனாவின் இருந்த மூத்த உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே அங்கு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.
எத்தனை பேர்
சுமார் 22 எம்எல்ஏக்களுடன் இவர் குஜராத்திற்கு சென்று அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இவருக்கான ஆதரவு 33 எம்எல்ஏக்களாக உயர்ந்ததாக கூறப்பட்டது. தன் பக்கம் 33 எம்எல்ஏக்கள் இருப்பதாக இவர் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது சுயேச்சை எம்எல்ஏக்களை சேர்த்து தனது 44 எம்எல்ஏக்கள் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். நேற்று இரவோடு இரவாக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் இருந்து அசாம் சென்றனர்.
அரசியல் புயல்
அசாம் சென்ற ஷிண்டே விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 40 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஆட்சி அமைப்பது குறித்தெல்லாம் முடிவு எடுக்கவில்லை. பால் தாக்கரேவின் ஹிந்துத்துவா அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்லுவோம். நாங்கள் யாருடைய கட்டாயத்தின் பெயரிலும் இங்கு தங்கி இருக்கவில்லை. பால் தாக்கரேவிற்கு நாங்கள் துரோகம் இழைக்க மாட்டோம். அவரின் கொள்கையை நாங்கள் எப்போதும் பின்பற்றுவோம்.
ஷிண்டே
நாங்கள் சிவசேனாவில்தான் இருக்கிறோம். பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவில்தான் தொடர்ந்து நீடிக்கிறோம் என்று ஷிண்டே கூறியுள்ளார். நேற்று அசாம் சென்ற ஷிண்டே உள்ளிட்ட 33 எம்எல்ஏக்களை அம்மாநில பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்கள் வரவேற்றது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சிவசேனாவிற்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு பெரும்பான்மை பெற 145 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது 40 எம்எல்ஏக்கள் சிவசேனாவில் அதிருப்தியில் இருப்பதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.