மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா ஆழிப்பேரலை.. இன்றும் 46,406 பேருக்கு பாதிப்பு உறுதி!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதி உச்சமாக நீடித்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் இன்றும் 46,406 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.46 லட்சமாக இருந்தது. இன்றும் கொரோனா பாதிப்பு நாட்டின் பல மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இன்று காலையுடனான 24 மணிநேர நிலவரப்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,47,417. ஆக பதிவானது. முந்தைய நாள் இது 2 லட்சத்தை நெருங்கியதாக இருந்தது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 11,17,531 ஆக இருந்தது.மொத்த கொரோனா பாதிப்பில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 3.08 சதவீதமாக இருந்தது. நாட்டில் இன்று காலை வரை ஒரே நாளில் 84,825 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,47,15,361 என அதிகரித்தது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 95.59 சதவீதம். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஓமிக்ரான் தொற்று 5,488 பேரிடம் கண்டறியப்பட்டிருந்தது. ஆனால் நாளை காலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கிற வகையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் உள்ளன.
'பல மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. எச்சரிக்கையாக இருங்கள்.. அச்சம் வேண்டாம்..' பிரதமர் மோடி பேச்சு
மகாராஷ்டிரா பாதிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 46,406 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும் 13,702 பேருக்கு தொற்று உறுதியானது.
டெல்லியில் பாதிப்பு
டெல்லியில் 28,867 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலின் தொடக்கம் முதல் இதுதான் அதி உச்ச பாதிப்பு டெல்லியில்.
பெங்களூருவில் அதிகம்
கர்நாடகாவில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் கர்நாடகாவில் 8 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பெங்களூரு நகரில் மட்டும் 18,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகம், கேரளா
தமிழகத்தில் 20,911 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. 6,235 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,03,610 ஆக பதிவாகி இருக்கிறது. கேரளாவில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. திருவனந்தபுரத்தில் மட்டும் 3,404 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.