முன்னால் ஒரு பெண்! பின்னால் ஒரு பெண்! கெத்து காட்ட முயன்ற இளைஞர்! கடைசியில் பாவம் இப்படி ஆகிடுச்சே
மும்பை: பைக் ஸ்டண்ட் என்ற பெயரில் சிலர் சாலைகளில் செய்யும் காரியங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
இப்போதெல்லாம் இளைஞர்கள், பைக்கை எடுத்தாலேயே விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கேற்றார் போலப் பல பரபர சம்பவங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
அதேபோல மும்பையில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு செய்த காரியம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

பைக் ஸ்டண்ட்
பைக் ஸ்டண்ட் என்பது வேறு. அது தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பான சூழலில் செய்யப்படுகிறது. ஆனால், சில இளைஞர்கள் பைக்கில் தாறுமாறாக வண்டியை ஒட்டிவிட்டு அதை பைக் ஸ்டண்ட் என்கிறார்கள். இவர்கள் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளையும் அணிவதில்லை. இதுபோன்ற செயல்களால் அவர்களுக்கு மட்டுமின்றி, சாலைகளில் செல்வோருக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து இருக்கவே செய்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியே வருகின்றனர்.

இரு பெண்கள்
மகாராஷ்டிராவில் இப்படிதான் ஆபத்தை உணராமல் ஒருவர் சாகசம் என்ற பெயரில் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் இரு பெண்களுடன் செய்த இந்த ஆபத்தான பைக் ஸ்டண்ட்டின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அந்த மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 13 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஆண் ஒருவர் நடுவே அமர்ந்திருக்க ஒரு பெண் முன்னாலும், ஒரு பெண் பின்னாலும் அமர்ந்து இருக்கிறார்கள்.

வீடியோ
அப்போது அந்த ஆண் பைக்கின் முன் சக்கரங்களைத் தூக்குகிறார். இரு பக்கமும் இருக்கும் பெண்கள் பயத்தில் அவரை பிடித்துக் கொள்ளக் கொஞ்ச தூரம் அவர்கள் அப்படியே பயணிக்கிறார்கள். பைக்கில் முன்னால் அமர்ந்திருக்கும் அந்த பெண், சிரித்துக் கொண்டே ஆபத்தான செயல்களைச் செய்யும் மற்றவர்களைக் காட்டுகிறார். இதில் மூன்று பேரும் ஹெல்மெட் உட்பட எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் அணியவில்லை. இந்தச் சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

போலீசார் நடவடிக்கை
மும்பை சாலைகளில் எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் அவர்கள் செய்த இந்த காரியத்தைப் பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும், பலரும் மும்பை போலீசாரை டேக் செய்தும் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பிகேசி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆபத்தான இந்த ஸ்டண்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை
இதில் இருப்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என்றும் மும்பை போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது ஐபிசி மற்றும் மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது பைன் மட்டும் போட்டுவிட்டு விட மாட்டோம், நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்கள் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
பைக்கை ஓட்டிய நபர் மீது மட்டுமின்றி, அந்த இரு பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே எப்ஐஆரில் அவர்கள் மீது ஐபிசி 114 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம், லக்னோவில் இதேபோலத் தான் ஓடும் பைக்கில் ஒரு ஜோடி ரோமென்ஸ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அந்தச் சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிய நபர் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications