Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிவுக்கு வந்த மராத்தா போராட்டம்.. இரு முக்கிய கோரிக்கைகளை ஏற்ற மகாராஷ்டிரா அரசு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மராத்தா இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி மகாராஷ்டிராவில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வந்தன. இதற்கிடையே இரு பிரதானக் கோரிக்கைகளை ஏற்க மகாராஷ்டிர பாஜக அரசு ஒப்புக்கொண்ட நிலையில், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

நமது நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளூர் சமூகத்தினர் தங்களுக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக மராத்தா போராட்டம் மகாராஷ்டிராவில் எப்போதுமே கவனிக்க வைப்பதாக இருக்கும். அதன்படி இப்போது மராத்தா இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கினர்.

Manoj Jarange Ends his 5 day Hunger Strike as Maharashtra Govt Accepts Key Maratha Quota Demands

போராட்டம்

மகாராஷ்டிராவில் ஓபிசி பிரிவில் 10% இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்பதை அறிவிக்கக் கோரியும் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினார். மனோஜ் ஜாரங்கிக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மராத்தா பிரிவினர் போராட்டம் நடக்கும் ஆசாத் மைதானத்திற்குத் திரண்டனர். ஆசாத் மைதானம் மட்டுமின்றி சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல் அதைச் சுற்றியுள்ள சாலைகள், பூங்காக்கள் என மிகப் பெரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன.

முடிவுக்கு வந்த போராட்டம்

இதற்கிடையே மகாராஷ்டிரா அரசுடன் இரு முக்கிய கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து எட்டியதைத் தொடர்ந்து, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜராங்கே அறிவித்தார். மேலும், இது தனக்குக் கிடைத்த வெற்றி இல்லை என்றும் இது போராட்டக்காரர்களின் வெற்றி என்றும் அவர் அறிவித்தார்.

கடந்த நான்கு நாட்களாக மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடந்து வந்த போராட்டத்தின் வெற்றி இது என்று ஜராங்கே தெரிவித்தார். மராத்வாடா பகுதியில் வசிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு குன்பி அந்தஸ்து வழங்க மகாராஷ்டிர அரசு ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஹைதராபாத் கெசட்டை அமல்படுத்துவதற்கான அரசாணை இன்று அன்று பிற்பகலில் வெளியிடப்பட்டது.

முக்கிய கோரிக்கை ஏற்பு

இந்த அரசாணையின்படி, மராத்வாடா பகுதியில் வசிக்கும் மராத்தா சமூகத்தினருக்குச் சரிபார்ப்புக்குப் பிறகு குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும். முந்தைய நிஜாம் ஆட்சியின் கீழ் ஹைதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த மராத்வாடா பகுதியில், பல மராத்தா சமூகத்தினர் குன்பிகளாக அங்கீகரிக்கப்பட்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 30%க்கும் மேல் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு அங்கு மாநில அரசியலில் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் தான் போராட்டத்தின் மூலம் முக்கிய கோரிக்கையை நிறைவேற்ற வைத்துள்ளனர். அதேபோல போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வாபஸ் பெறுவதாகவும் அரசு உறுதியளித்ததாகவும் ஜராங்கே குறிப்பிட்டார்.

நேரில் சந்தித்து விளக்கம்

போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இழப்பீடும், அவர்களுக்கு அரசு வேலைகளும் வழங்க முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதை எல்லாம் பட்டியலிட்ட மனோஜ் ஜராங்கே கடைசியில், "நாங்கள் வென்றுவிட்டோம்" என்று சொல்ல, அங்கிருந்த மக்கள் எல்லாரும் ஆரவாரம் செய்தனர்.

மகாராஷ்டிர அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தலைமையிலான அமைச்சரவைக் குழு மனோஜ் ஜராங்கேவை சந்தித்து விளக்கமளித்தனர். மேலும், குன்பிகளும் மராத்தாக்களும் ஒரே சமூகம் என்று குறிப்பிடும் அரசாணையை வெளியிடுவதற்கான சட்டப்பூர்வ வழிகள் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்தச் செயல்முறைக்குச் சுமார் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் அந்தக் குழு ஜராங்கேவிடம் தெரிவித்தது.

மும்பை ஐகோர்ட்

ஆகஸ்ட் 29ம் தேதி ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜராங்கேவும் சுமார் 4,000 போராட்டக்காரர்களும் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். இது தெற்கு மும்பையில் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. அரசு வேலைகள் மற்றும் கல்வியில் ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்திற்கு 10% இடஒதுக்கீடு கோரி அவர்கள் போராடினர். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக மும்பையை முற்றிலுமாக முடக்கியுள்ளதாகவும் இதனால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் போராட்ட இடத்தைக் காலி செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+