பெருநெருப்பாய் மராத்தா இடஒதுக்கீடு: சாகும் வரை உண்ணாவிரதம் கைவிட அனைத்து கட்சி கூட்டம் அவசர அப்பீல்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மராத்தா இடஒதுக்கீடு கோரி 15 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தும் போராட்டக்காரர் மனோஜ் தமது முடிவை கைவிட வேண்டும் என அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மண்ணின் பூர்வகுடி மக்களான மராத்தா மக்கள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாகப் போராடுகின்றனர். மராத்தா மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுகள் பொது நலன் வழக்குகள் மூலம் ரத்து செய்யப்பட்ட துயரமும் நிகழ்ந்துள்ளது.

தற்போது கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் பெரும் தலைவலியாகவும் உருவெடுத்துள்ளது.
இதனிடையே முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று மகாராஷ்டிரா மாநில அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த 15 நாட்களாக மராத்தா இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் தமது முடிவை கைவிட வேண்டும் என அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சொட்டு நீரும் அருந்தாமல் மனோஜ் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி சரதி கிராமத்தில்தான் இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஜல்னா மாவட்டத்தில்தான் மராத்தா இடஒதுக்கீடு கோரி போராடியவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் வன்முறையும் வெடித்திருந்தது. இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் மராத்தா மக்கள் தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றும் தொடர் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் தொடர்ந்து நீடிக்கும் மராத்தா போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது தெரியாமல் ஆளும் பாஜக கூட்டணி அரசு விழித்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இது தொடர்பான மசோதா ஏதேனும் கொண்டு வரப்பட்டால் தற்போதைய நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்பது அம்மாநில எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு.












Click it and Unblock the Notifications