மும்பை: இந்தியில் பேசிய D-Mart பணியாளருக்கு 'பளார்'- உயர்நீதிமன்றத்துக்கு 'பில்லி சூனிய' பூஜை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தி மொழியில்தான் பேசுவேன் என அடம்பிடித்த வடமாநில தொழிலாளருக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நிர்வாகிகள் பளார் பளார் என கன்னத்தில் அறைவிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் மும்பை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் மர்ம நபர்கள், மாந்திரீக பூஜை செய்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா- மும்பை என்றாலே இந்தி மொழிதான் பேசுவார்கள் என்கிற பொதுத் தோற்றம் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிரா மாநில மக்கள் தங்களது தாய் மொழியான மராத்தியில் பேச மறுக்கும் பிற மாநிலத்தவர் மீது தாக்குதல்கள் நடத்துவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அண்மையில் கர்நாடகா மாநில எல்லையில் கர்நாடகா அரசு பேருந்தில் பயணித்த மராத்தியர்கள், நடத்துநர் மராத்தி மொழியில் பேச மறுத்ததால் தாக்கினர்; இதற்கு பதிலடியாக கன்னடத்தில் பேச மறுத்த மராத்தியர்கள் மீது கன்னட மொழி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இரு மாநில எல்லைகளிலும் பதற்றம் ஏற்பட்டு பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த பதற்றம் தற்போதுதான் தணிந்துள்ளது.
இந்த நிலையில் மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள டி மார்ட் (D-Mart) சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர் ஒருவர், வாடிக்கையாளரிடம் இந்தி மொழியில் பேசி இருக்கிறார். இந்தி தமக்கு புரியவில்லை; அதனால் மராத்தி மொழியில் பேசுமாறு வாடிக்கையாளர் கூறியிருக்கிறார். ஆனால் டி மார்ட் பணியாளரோ தமக்கு இந்தியில்தான் பேச தெரியும்; இந்தியில் மட்டுமே பேசவும் முடியும் என அடம்பிடித்துள்ளார். இதனால் டி மார்ட் பணியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெசோவா பகுதியில் உள்ள டி மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர், இந்தியில்தான் பேசுவேன் என அடம்பிடித்த பணியாளரை அடையாளம் கண்டுபிடித்து கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளனர்; மராத்திய மண்ணில் மராத்தி மொழியில்தான் பேச வேண்டும் என எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றனர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நிர்வாகிகள்.
மகாராஷ்டிராவில் மற்றொரு நிகழ்வும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளை தடுக்க சட்டம் அமலில் உள்ளது. இதற்கு எதிராக மந்திரவாதிகள் பலரும் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
மும்பை உயர்நீதிமன்றத்துக்கு பில்லி சூனிய பூஜை!
இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்துக்கு சென்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு பேரதிர்ச்சியாக அனைத்து வாயில்களிலும், மாந்திரீகம் செய்யப்பட்ட பூஜை பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டனர். தேங்காய், எலுமிச்சை பழம், குங்குமம், கறுப்பு நிற சாத்தான் பொம்மை என ஒவ்வொரு நுழைவாயிலிலும் சிதறிக் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாந்திரீகப் பொருட்களை அகற்றுவதற்கும் தூய்மை பணியாளர்கள் தயங்கினர். இது தொடர்பாக போலிசாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்துக்கே பில்லி சூனிய பூஜை நடத்தி மிரட்டல் விடுத்த மந்திரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications