மராத்தி vs கன்னடா மொழிப்போர்-கர்நாடகாவில் 22-ந் தேதி பந்த்- மகாராஷ்டிரா பேருந்துகளுக்கு நேர்ந்த கதி!
மும்பை: மகாராஷ்டிராவின் மராத்தி மற்றும் கர்நாடகாவின் கன்னடா மொழியை முன்வைத்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. கர்நாடகா பேருந்து ஓட்டுநர், நடத்துநரை மராத்தி மொழி பேசும் மக்கள் தாக்கியதைக் கண்டித்து வரும் 22-தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு கர்நாடகா மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், மகாராஷ்டிரா எல்லையில் உள்ளது. இந்த எல்லைப் பகுதி கிராமங்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உரிமை கோரி வருகிறது. இப்பகுதியில் மராத்தி மொழி பேசும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால் மகாராஷ்டிராவுடன் தங்களை இணைக்க வேண்டும் எனவும் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநில அரசு பேருந்தில் பயணச் சீட்டு கொடுக்கும் விவகாரத்தில் கன்னடத்தில் நடத்துநர் பேசியதற்கு மராத்தி மொழி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தகராறில் முடிந்தது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்துகளை கன்னட மொழி அமைப்பினர் தாக்கினர். இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிடையேயான பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பாக இரு மாநில அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடகா எல்லைக்கு வந்த மகராஷ்டிரா அரசு பேருந்து ஒன்றை கன்னட மொழி அமைப்பினர் நேற்று தடுத்தினர்; அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை கீழே இறக்கிவிட்ட கன்னட அமைப்பினர் அவர்களுக்கு சால்வை அணிவித்தனர். பின்னர் மகாராஷ்டிரா அரசு பேருந்தின் மீது ஜெய் கர்நாடகா என கன்னட மொழியில் எழுதினர்; அத்துடன் அப்பேருந்தின் மீது ஏறி நின்று கர்நாடகா கொடியை உயர்த்திப் பிடித்து முழக்கமும் எழுப்பப்பட்டது.
#WATCH | Karnataka | Language row: Pro-Kannada activists stopped a Maharashtra State Road Transport Corporation Bus in Karnataka's Kalaburagi. They felicitated the bus driver and conductor with shawls. Later, they wrote "Jai Kannada" on the bus pic.twitter.com/X3QL7GQuua
— ANI (@ANI) March 1, 2025
இந்த பரபரப்புகளுக்கு நடுவே, மராத்தி மொழி அமைப்பினரின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 22-ந் தேதி கர்நாடகா மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடகா மாநில பாஜக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறும் மாணவர்களுக்கான தேர்வுகள் பாதிக்காத வகையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும் கர்நாடகா பாஜக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications