முகேஷ் அம்பானியின் புதிய திட்டங்கள்.. இந்தியாவில் வரப்போகும் மிகப்பெரிய திருப்பம்!
மும்பை: முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ்.. ஜியோ.. இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குச்சந்தையிலும் சரி, பொதுமக்கள் மத்தியிலும் சரி மிகப்பெரிய வெற்றி பெற்ற பெயர்களாக ஆக உள்ளது. மூன்று பெயர்களில் முகேஷ் அம்பானி தனிநபர், மற்ற இரண்டு வார்த்தைகள் அவருடைய நிறுவனங்கள்.
முகேஷ் அம்பானி ஒவ்வொரு தொழிலாக இறங்கி அடித்து வெற்றி பெற்று வருகிறார். சொல்லி வைத்த மாதிரி அவர் ஒரே மாதிரி அடித்து வெல்வது ஆச்சயர்மாக இருக்கும் பலருக்கும். அவருடைய வெற்றி பார்முலாதான் அதற்கு காரணம்.
மும்பையை தலைமையிடமாக கொண்ட முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கச்சா எண்ணெய் (பெட்ரோல் டீசல்) சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. டாலர் மதிப்பில் விலைகள் இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்படுவதால் பணம் அந்த துறையில் மழையாக கொட்டுகிறது.

திணறும் நிறுவனங்கள்
இன்னொரு பக்கம் அவர் ஆரம்பித்த ஜியோ நிறுவனம் தான் இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. போட்டியில் உள்ள ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஜியோவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இப்போது டேட்டா விலை கிட்டத்தட்ட ஒரே மாதிரி வந்துவிட்டாலும் ஜியோ ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீள சில வருடங்கள் ஆகும்.

பிராட்பேண்ட்
முகேஷ் அம்பானி அடுத்தடுத்து வென்று வரும் நிலையில் அடுத்ததாக ஜியோ பைபர் என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இதன்படி மாதம் 399 ரூபாய்க்கு பிராட்பேண்ட் சேவையை வழங்கி வருகிறார். இந்த சேவையை முதல் 30 நாட்கள் இலவசமாக தரப்போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் 12 ஒடிடி சர்வீஸ் தளங்களையும் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்துள்ளார்.

மிக முக்கியமான திட்டம்
இதன் மூலம் வீடுகளில் இணைய இணைப்பு முழுமையாக ஜியோவாக இன்னும் சில மாதங்களில் மாறப்போகிறது. காரணம் இனி வரும் காலங்களில் கேபிளில் டிவி பார்த்த காலம் போய் இணையத்தில் டிவி பார்க்கும் காலம் வரப்போகிறது. அளவற்ற டேட்டாக்கள் மக்களால் நாள்தோறும் பயன்படுத்தப்படலாம். அதற்கு செல்போனின் இணைய வேகம் போதாது என்பதால் பிராட்பேண்ட் இணையசேவையை பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாதம் ரூபாய் 500 முகேஷ் அம்பானிக்கு போக போகிறது. அடுத்த தொழில்நுட்பம் இதுதான் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 30 எம்பி ஸ்பீட் முதல் 100 எம்பி ஸ்பீட் வரை தரப்போவதாக அறிவித்துள்ளார்.

எண்ணற்ற இலவசம்
முகேஷ்அம்பானி ஜியோ பைபரை தொடர்ந்து ஜியோ மார்ட் என்ற ஆன்லைன் கடையை ஆரம்பித்துள்ளது. இதிலும் இனி வரும் நாட்களில் மிகப்பெரிய அளவில் ஆபர்கள் வழங்கப்பட உள்ளது. இதுவரை பார்க்காத அளவிற்கு இலவசங்களும், குறைந்த விலையில் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மளிகை, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் அமேசானுக்கு போட்டி போடும் வகையில் வளர முயற்சி எடுத்துள்ளது.

எப்படி வெல்கிறார்
மேலே சொன்ன எல்லாவற்றிலும் ஒற்றுமை ஒன்று உள்ளது. அதுதான் இலவசம். மக்களுக்கு இலவசமாக ஒரு விஷயத்தை கொடுத்து, அதை அனுபவிக்க வைத்து அதற்கு மக்களை முழுமையாக அடிமையாக்கி அந்த வாங்க வைத்தது தான் அம்பானியின் வெற்றி பார்முலா. எதை மக்கள் நீண்ட காலம் பயன்படுத்த போகிறார்களோ அதை இலவசமாக தந்து அவர்களை தன் வாடிக்கையாளர்களாக மாற்றுவதுதான் அவரது வெற்றிக்கு காரணம். இப்படி செய்வதால் அவருக்கு நஷ்டம் ஏற்படாதா என்றால்., ,நிச்சயம் ஏற்படும்.ஆனால் பல கோடி பேரை வாங்க வைத்தால் லாபம் வரும்., அத்துடன் போட்டி நிறுவனங்கள் அழிந்துவிடும். அதன்பிறகு இவர்கள் வைப்பது தான் விலை என்பதால் எந்த பாதிப்பும் வராது. தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்துவதில் வெற்றி கண்ட முகேஷ் அம்பானிதான் இந்தியாவில் கொரோனாவிலும் பெரும் லாபம் ஈட்டிய செல்வந்தர் ஆவார். அவருடைய பங்குகளே தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு வருடங்களின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி.












Click it and Unblock the Notifications