சைஃப் அலி கான் விவகாரம்.. கத்தியால் குத்தியவர் கைது.. 30 மணி நேரத்தில் கண்டுபிடித்த மும்பை போலீஸ்!
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். சைஃப் அலி கான் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கிய ஆதாரங்களை கொண்டு கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான சைஃப் அலி கானின் வீட்டில் நேற்று நள்ளிரவு கொள்ளையடிக்க முயற்சிகள் நடந்தது. இந்த சம்பவத்தின் போது வீட்டில் பணியாற்றும் நபர் கொள்ளையனை முதலில் பார்த்து சத்தம் எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொள்ளையனை தடுக்க சைஃப் அலி கான் முயன்ற போது, கொள்ளையன் சைஃப் அலி கானை 6 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து சைஃப் அலி கானுக்கு உடனடியாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் காயம் தீவிரமாக இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாந்த்ராவில் எப்போதும் அதிகளவில் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இதனை மீறி எப்படி சைஃப் அலி கான் வீட்டிற்குள் கொள்ளையன் புகுந்தார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் சைஃப் அலி கான் வீட்டில் பணியாற்றும் நபர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதேபோல் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். அப்போது தீ விபத்து ஏற்பட்டால் பயன்படுத்தும் அவசர பாதையை பயன்படுத்தி கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது.
கொள்ளையனை பிடிக்க 18 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் கொள்ளையனின் புகைப்படத்தையும் போலீசார் கண்டறிந்து, அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 30 மணி நேரம் கடந்த பின்னரும் யாரும் கைது செய்யப்படாதது பேசுபொருளானது.
இந்த நிலையில் மும்பை போலீசார் சந்தேகத்திற்குள்ளான நபர் ஒருவரை கைது செய்து, பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications