மும்பைக்கே உணவளித்த டப்பாவாலாக்கள்.. இன்று ஒரு வேளை உணவுக்கே அவதிப்படும் நிலை
மும்பை: லாக்டவுனால் மும்பை டப்பாவாலாக்களின் வாழ்வாதாரம் இருண்டு காணப்படுகிறது. காலங்காலமாக இந்த தொழிலை செய்து வரும் டப்பாவாலாக்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் லாக்டவுனால் பல்வேறு கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. தற்போதுதான் இந்தியா முழுவதும் லேசான இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. இங்கு 4ஆவது லாக்டவுன் அறிவித்த போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு மும்பை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

மும்பை டப்பாவாலாக்கள்
எனினும் மும்பை நகரம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் நேரத்திற்கு பலரது பசியை ஆற்றுவதற்கும் காரணமாக இருப்பவர்கள் மும்பை டப்பாவாலாக்கள். என்னதான் மும்பையில் இயல்பு நிலை திரும்பினாலும் இவர்கள் வருமானமின்றி வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள். யார் இந்த டப்பாவாலாக்கள் என பார்ப்போம்.

காலி டப்பா
மும்பையில் அலுவலகங்களில் பணிபுரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று அவரவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கி காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லஙகளில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலானோர் கால்களில் காலணி கூட அணியாமல் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நடைப்பயணம்
இருசக்கர வாகனம், நடைப்பயணம், ரயில் என பல்வேறு போக்குவரத்து மூலம் உணவை பெறுவது, டெலிவரி செய்வது என செய்கிறார்கள். தற்போது உணவை பெறுவது, டெலிவரி செய்வது ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள எஸ்எம்எஸ் சேவையையும் தொடங்கி வருகிறார்கள். இவர்களது பணி என்பது இடையறாத சேவையாகும்.

மும்பை
பருவமழை தொடங்கினாலும் சரி, மும்பையே வெள்ளக்காடாக இருந்தாலும் சரி குறுக்கு வழிகள், சந்து பொந்துகளை பயன்படுத்தி உணவை சேர்க்கிறார்கள். 125 ஆண்டுகளாக நடக்கும் இந்த டப்பாவாலா தொழிலால் மெச்சிய வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்தியா வந்த போது டப்பாவாலாக்களை சந்தித்தார். அது போல் இவர்கள் குறித்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

மசோதா
125 ஆண்டுகளாக மழை, புயல், வெள்ளம், வெயில் என எது இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி சுறுசுறுப்பாக பம்பரம் போல் சுழன்ற டப்பாவாலாக்கள் முதல் முறையாக 2011-ஆம் ஆண்டு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர்.

வாழ்வு
இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் இவர்களது வாழ்வை புரட்டி போட்டுவிட்டது. இவர்கள் 3 மாதங்களுக்கு மேலாக பணியின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களது உணவு டெலிவரி அமைப்பை சார்ந்துள்ளோர் பெரும்பாலும் உள்ளூர் ரயில் சேவைகளை நம்பி இருப்பர்களே. நிசர்கா புயலும் புரட்டி போட்டதால் இவர்களது நிலை மிகவும் மோசமாகிவிட்டது.

வைரஸ்
இதுகுறித்து வினோத் ஷெட்டி எனும் டபபாவாலா கூறுகையில் எனது மனைவி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு செய்யப்படும் மருத்துவ சோதனைகள் அனைத்தும் அதிக கட்டணமாக இருக்கிறது. இதை சமாளிக்க என்னால் முடியவில்லை. ஒரு ரத்த பரிசோதனைக்கு ரூ 1300 ஆகிறது. அந்த பணம் கூட என்னிடம் இல்லை. கொரோனா வைரஸால் எங்கள் பணியை நாங்கள் தொடங்கவில்லை என்கிறார்.

பாதிப்பு
அது போல் மற்றொருவர் , என் வருமானத்தில்தான் என் குடும்பமே நம்பி இருக்கிறது. என் அம்மா, மனைவி, மகள் ஆகியோர் உள்ளனர். என் வீட்டை நிசர்கா புயல் நாசமாக்கிவிட்டது. அதை சரி செய்யக் கூட என்னிடம் பணம் இல்லை. எப்போது மழை வந்தாலும் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம் என்றார். அனைவருக்கும் குறித்த நேரத்தில் உணவு கொடுத்த டப்பாவாலாக்கள் தற்போது ஒரு வேளை உணவின்றி தவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications