4 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது மும்பை.. கொரோனாவால் ஒரே நாளில் மிக மோசமான பாதிப்பு
மும்பை: மும்பையில் வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் 522 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக மும்பையில் 4,025 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 6,427 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மும்பையில் உள்ளார்கள்.
மும்பையில் ஒற்றை நாளில் மிகப்பெரிய பாதிப்பு என்பது ஏப்ரல் 19 அன்று 456 பாசிட்டிவ் ஆக இருந்தது. ஆனால் வியாழக்கிழமை ஒரு நாளில் 522 பேருக்கு கொரோனா ஏற்பட்டதன் மூலம் புதிய உச்சத்தை மும்பை தொட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை பதினான்கு நோயாளிகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், இதனால் அம்மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது. மும்பை நகரத்தில் இறப்பு எண்ணிக்கை ஆறு அதிகரித்ததால் 167 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் நேற்று இறந்த 14 பேர்களில், மூன்று பேர் 40 வயதிற்குட்பட்டவர்கள், ஒன்பது பேர் 40-59 க்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அவர்களில் ஏழு பேருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா அல்லது இதய நோய் இருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பைக்குப் பிறகு, புனேவில் இரண்டாவது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, அங்கு ஐந்து பேர் இறந்துள்ளார்கள். அதே நேரத்தில் நந்துர்பார், நவி மும்பை மற்றும் துலே ஆகிய இடங்களில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே மும்பை நகரம் தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கொரோனாவின் ஹாட்ஸ்பாட் ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கு மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளதாலும், குடிசைப்பகுதிகளில் வைரஸ் பரவுவது வேகமாக அதிகரிப்பதாலும் கொரோனா பரவல் உச்சகட்டமாக உள்ளது. இதனிடையே குடிசை பகுதிகளில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications