டிக்கெட் இல்லையா.. அப்ப ஃபைன் கட்டு – பரிசோதகரை தாக்கிய மும்பை புள்ளீங்கோஸ்
மும்பை: ரயில்களில் டிக்கெட் இல்லாமல் வித்அவுட்டில் பயணிப்பதும், ஓப்பன் டிக்கெட் வாங்கிவிட்டு ரிசர்வர்டு பெட்டிகளில் ஏறி பயணிப்பதும் இந்தியாவில், அதிலும் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது. அப்படி பயணிப்பவர்கள் டிக்கெட் பரிசோதகரை கண்டால் பயப்படுவார்கள். ஆனால் மும்பை லோக்கல் ரயிலில் அதற்கு நேர் எதிரான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
என்னதான் மெட்ரோ ரயில் இருந்தாலும், மும்பை போக்குவரத்துக்கு உள்ளூர் ரயிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மும்பை முதன்மை ரயில் டிக்கெட் ஆய்வாளர் ஜஸ்பீர் சிங் உள்ளூர் ரயிலில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏ.சி கோச்சில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த எதிர்பாராத பிரச்னை நடந்துள்ளது. அங்கிட் போஸ்லே என்ற பயணியின் டிக்கெட்டை பரிசோதித்துள்ளார். அங்கிட் சர்ச்கேட்டில் இருந்து விறார் பகுதிக்கு பயணித்துள்ளார். அவரிடம் அதற்கான டிக்கெட்டும் இருந்துள்ளது. இருப்பினும் சாதாரண டிக்கெட்டை எடுத்துவிட்டு, அவர் ஏ.சி கோச்சில் ஏறி பயணித்தது தெரியவந்தது. இதனால் ஜஸ்பீர் சிங், அவரை அபராதம் கட்ட சொல்லியிருக்கிறார்.

அபராதம் கட்ட மறுத்த அங்கிட், ஜஸ்பீர் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்திலேயே அங்கிட் ஜஸ்பீரை தாக்க தொடங்கினார். வயதானவர் என்று கூட பார்க்காமல் அங்கிட் அவரை தாக்க, அவருடன் சேர்ந்து மேலும் சில பயணிகளும் ஜஸ்பீரின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளனர். இதில் ஜஸ்பீரின் சட்டை கிழிந்துவிட்டது. ரயில் பயணிகள் இணைந்து டிக்கெட் பரிசோதகரை தாக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரயிலில் ஜஸ்பீர் சிங்கை, சிறிது தூரத்துக்கு விரட்டி சென்று, சுவரில் சாய்த்து அடிக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஜஸ்பீர் சிங் காயமடைந்துள்ளார். அவரின் கை பகுதியில் காயம் ஏற்படுள்ளது. அதனுடன் அவர் விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் அபராதமாக சேகரித்து வைத்த ரூ.1,500 ரொக்கம் காணாமல் போயுள்ளது. இந்த அசம்பாவிதம் காரணமாக அந்த ரயில் போரிவல்லி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்றுவிட்டது. அங்கிருந்த அதிகாரிகள் அங்கிட்டை ரயிலை விட்டு இறங்க சொல்லியும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நலசோபாரா ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அங்கிட்டை ரயிலில் இருந்து வெளியேற்றி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே அங்கிட் தனது தவறை மிகவும் தாமதமாக உணர்ந்துள்ளார். அவர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், வழக்குப்பதிவு செய்தால் என் வேலை உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதனுடன் மாயமான அபராத தொகை ரூ.1,500 உடன் ஜபீர் சிங்குக்கு இழப்பீட்டையும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதன் காரணமாக அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினார்கள். இந்த சம்பவம் மும்பை ரயில் அதிகாரிகள் மற்றும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications