இந்து மாணவிகளிடம் பேசிய இஸ்லாமிய மாணவர் மீது தாக்குதல்! சாவித்ரிபாய் புலே பல்கலை.யில் ஷாக்
மும்பை: புனேவின் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் இந்து பெண்களுடன் பேசியதற்காக இஸ்லாமிய மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பவன் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. திறன் மேம்பாட்டு பிரிவில் இஸ்லாமிய மாணவர் ஒருவர் பயின்று வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவர் தனது சக மாணவர்கள் மற்றும் மாணவிகளுடன் பாபா சாகேப் அம்பேத்கர் பவனில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மூன்று பைக்குகளில் 6 இளைஞர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் கார்டை காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். மாணவர் மறுத்திருக்கிறார். பின்னர், அந்த மாணவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் மதம் குறித்து இளைஞர்கள் அவதூறாக பேசியிருக்கிறார்கள். லக் ஜிகாத் மூலம் தங்கள் மதத்தை சேர்ந்த பெண்களை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சிப்பதாக மாணவரை இளைஞர்கள் சரமாரியாக அவதூறாக பேசியிருக்கிறார்கள். இது வாக்குவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதனையடுத்து இளைஞர்கள், இஸ்லாமிய மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கும் போது இந்து பெண்களுடன் பேசக்கூடாது, ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூடாது, அவர்களுடன் சேரக்கூடாது என்று கூறியுள்ளனர். திடீர் வன்முறையால், மாணவிகளும், சக மாணவர்களும் கேன்டீனிலிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அனைவருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்று போராடிய, சாவித்ரிபாய் புலே பெயரை கொண்ட கல்வி நிலையத்தில், சிறுபான்மை மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இடதுசாரி மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே டெல்லி ஜேஎன்யுவில் இது போன்று ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், புனேவில் இப்படி நடப்பது இதுதான் முதல்முறை என்று மாணவர் சங்கத்தினர் கூறுகிறனர். மட்டுமல்லாது, இதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications