நிர்மலா சீதாராமனிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பங்குச் சந்தை புரோக்கர்.. பதில்தான் ஹைலைட்!
மும்பை: மும்பையைச் சேர்ந்த பங்குச்சந்தை புரோக்கர் ஒருவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யும் தங்களை விட அரசு 'ஸ்லீப்பிங் பார்ட்னர்' போல லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்வதாக அவர் விமர்சித்த நிலையில், நிர்மலா சீதாராமன் அதற்கு சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.
மும்பை பங்குச் சந்தையில் "விஷன் ஃபார் இந்தியன் ஃபைனான்ஸ் மார்க்கெட்ஸ்" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்குச் சந்தை முதலீடுகள், வரி விதிப்பு ஆகியவை குறித்து பங்குச்சந்தை புரோக்கர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பங்குச்சந்தை புரோக்கர் ஒருவர் மத்திய அரசின் வரி விதிப்பு முறை மக்களை கடுமையான இன்னலுக்கு உள்ளாக்குவது குறித்து மத்திய நிர்மலா சீதாராமனிடம் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார். நாட்டு மக்கள் பலர் மனதிலும் உள்ள கேள்விகளை மத்திய நிதி அமைச்சர் முன்பாக வைத்தார் அவர்.
"பங்குச் சந்தையில் நான் முதலீடு செய்கிறேன், நான் நிறைய ரிஸ்க் எடுத்து வருகிறேன். ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, எஸ்டிடி, முத்திரை வரி போன்ற நீண்ட கால ஆதாய வரிகளைச் செலுத்துகிறேன். ஆனால் என்னுடைய முழு லாபத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. மத்திய அரசுதான், பங்குச் சந்தை தரகர்களை விட அதிக பணம் சம்பாதிக்கிறது.
நான் எல்லாவற்றையும் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்கிறேன். நான் வொர்க்கிங் பார்ட்னராக இருக்கிறேன். ஆனால் இந்திய அரசாங்கம் வெறும் ஸ்லீப்பிங் பார்ட்னராக இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது." என்று விமர்சித்தார்.
வணிக நிர்வாகத்தில் பங்கேற்காத பங்குதாரர் போல லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்வதைச் சுட்டிக்காட்ட ஸ்லீப்பிங் பார்ட்னர் என்ற பதத்தை பயன்படுத்தினார் அவர். மேலும் பேசிய அவர், ஒரு வீட்டை வாங்கும்போது மக்கள் மீது சுமத்தப்படும் வரிச்சுமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தற்போது மும்பை போன்ற இடங்களில் வீடு வாங்குவது என்பது பகல் கனவாகவே இருக்கிறது. வீட்டை வெள்ளையான அதாவது நியாயமான பணத்தில்தான் வாங்க முடியும். ஏனென்றால் நான் வரி செலுத்துகிறேன், என்னிடம் வெள்ளைப் பணம் இருக்கிறது. எனது பேங்க் பேலன்ஸ் என்பது இந்திய அரசுக்கு வரி செலுத்திய பிறகு இருக்கும் மிச்சம் தான்.
இப்போது நான் வீடு வாங்கப் போகும் போது முத்திரை வரி, ஜிஎஸ்டி என மீண்டும் 11 சதவீதம் செலுத்த வேண்டி இருக்கிறது. வரி செலுத்தி மிச்சமுள்ள பணத்தை வைத்து வீடு வாங்கும்போது அதற்கும் வரி தர வேண்டியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட ஒரு நபருக்கு வீடு வாங்க நீங்கள் எந்த வகையில் உதவுகிறீர்கள்? என்று, அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிரித்துக்கொண்டே, "இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஸ்லீப்பிங் பார்ட்னரால் இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது" எனக் கூறினார்.
மக்கள் மனதில் உள்ள கேள்விகளை எழுப்பிய பங்குச்சந்தை புரோக்கருக்கு அவர் எழுப்பிய கேள்விகள் சார்ந்து பதில் அளிக்காமல், அவர் தனது கேள்வியில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை வைத்து மழுப்பலாக பதில் கூறியது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications