ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு.. தலைவலியை ஏற்படுத்திய வாட்ஸ்அப் சாட்கள்.. ஷாருக் அடுத்த மூவ் என்ன
மும்பை: ஷாருக் கான் மகன் ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்களில் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்துவதும் போதைப்பொருள் டீலர்கள் உடன் தொடர்பில் இருப்பதும் உறுதியாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஜாமீன் மனுவை ரத்து செய்தனர். இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்ட்டி நடைபெற உள்ளதாகக் கடந்த செப். மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கப்பலில் ரகசியமாக ஏறிய என்சிபி அதிகாரிகள், கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிரடி சோதனை நடத்தினர்.

ஆர்யன் கான் கைது
அப்போது அந்தக் கப்பலில் போதைப் பொருட்களுடன் கூடிய ரேவ் பார்ட்டி நடப்பதை உறுதி செய்தனர். இது தொடர்பாக முதலில் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 10 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் ஆர்யான் கான் சார்பில் ஜாமீன் கோரி கடந்த வாரம் மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.. ஆர்யன் கானை விடுவிப்பது வழக்கு விசாரணையை எவ்விதத்திலும் பாதிக்காது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

போதைப்பொருள் இல்லை
மேலும், ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இதற்குக் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த என்சிபி அதிகாரிகள், ஆர்யன் கான் சமூகத்தில் செல்வாக்கு மிகுந்த நபர் என்பதால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாக வாதிட்டனர். மேலும், ஆர்யன் கானுக்கு போதைப் பொருள் சப்ளை செய்பவர்கள் அவருடன் கப்பலில் இருந்ததாகவும் அவருக்குச் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்பு இருப்பதாகவும் என்சிபி வழக்கறிஞர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் சாட்கள்
ஆர்யன் கான் ஏதோ ஒரு முறை மட்டும் போதைப் பொருளைப் பயன்படுத்தியவர் இல்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து போதைப் பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும் வாதிட்டார். ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் தொடர் விடுமுறை இருந்ததால் இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ஜாமீன் தள்ளுபடி
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன கான் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர், போதைப் பொருளைப் பயன்படுத்துவதும் பொருள் சப்ளையர்கள் மற்றும் டீலர்களுடன் தொடர்பை வைத்துள்ளதும் தெரிவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த மூவ்
இதையடுத்து ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வரும் வரை ஆர்யன் கான் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் மும்பை சிறையில் இருந்த ஆர்யன் கான் உடன் அவரது தந்தை ஷாருக் கான் மற்றும் மனைவி கவுரி கான் ஆகியோர் வீடியோ கால் மூலம் பேசினர். பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் ஆர்யன் கானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். அதேபோல இந்த சம்பவத்தை வைத்து மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசை பாஜக மிகக் கடுமையாகச் சாடி வருகிறது.












Click it and Unblock the Notifications