வாகன விற்பனை குறைய இதுவா காரணம்.. பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய திட்டம்? நிதின் கட்கரி விளக்கம்
மும்பை: பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தடை செய்யப் போவதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு எலக்ட்ரிக்கல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பட்ஜெட்டில் வரி சலுகைகளை அறிவித்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கத்தில் எலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை பெருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அஜெண்டா, என்பது தெளிவாக தெரிந்தது.

இதையடுத்து பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் பிற வாகனங்களை வாங்குவதை ஒத்திப் போட ஆரம்பித்தனர். அதுவும் தற்போது நாட்டின், வாகன விற்பனை சரிவுக்கு ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், நிதின்கட்கரி அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பழைய வாகனங்களை ஸ்க்ராப் செய்வது தொடர்பான புதிய கொள்கை ஒன்றை விரைவில் மத்திய அரசு கொண்டு வரும். ஹைபிரிட் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மத்திய அரசு தடை செய்யும் திட்டம் எதுவும் கிடையாது. நாம், 7 லட்சம் கோடி மதிப்புக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறோம். இது பெருமளவுக்கு அன்னிய செலவாணி இழப்புக்கு வழிவகுக்கிறது.
மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, நாம் முக்கியத்துவம் தர வேண்டியிருக்கிறது. எனவேதான் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனாலேயே பிற வாகனங்களை தடை செய்யும் நோக்கம் கிடையாது.

வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக, உற்பத்தியாளர்கள் கடன் கொடுப்பதிலும் ஆர்வம் காட்டவேண்டும். இதன் மூலமாக எளிதாக கடன் கிடைக்கும் போது அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்கும் வாய்ப்பு உருவாகும். பொருளாதார மந்த நிலை நிலவும் போதிலும், இது முற்றிலும் சர்வதேச அளவிலானது. இந்தியாவில் மட்டுமே இந்த நிலைமை கிடையாது. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications