மாநில அரசியல் தலைவர்களை மொத்தமாக காலி செய்யும் பாஜக.. தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன!
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதில் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக சரத் பவாரின் கோட்டையாக இருந்த புனேவில் பாஜக மிகப் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் மிக முக்கிய பிராந்தியக் கட்சியை வழிநடத்திய சரத் பவார் கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மகாராஷ்டிராவில் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வருகிறது. அதில் மும்பை உட்பட எல்லா மாநகராட்சிகளிலும் பாஜக கூட்டணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சரத் பவாின் கோட்டையாகக் கருதப்பட்ட புனேவில் பாஜக சிக்சர் அடித்துள்ளது என்றே சொல்லலாம்.

சரத் பவார்
அதேநேரம் சரத் பவார் கட்சிக்கு அங்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்சிபி கட்சியை வளர்த்தெடுத்து மிக முக்கியமான மாநிலக் கட்சியின் தலைவராக இருந்த சரத் பவார் செல்வாக்கு சரிந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதற்குச் சில முக்கிய காரணங்கள் இருக்கிறது.
முதலில் அனைவருக்கும் தெரியும், என்சிபி கட்சி கடந்த 2023ல் இரண்டாகப் பிளவுபட்டது. சரத் பவார் மற்றும் அவரது மருமகன் அஜித் பவார் இடையே ஏற்பட்ட அரசியல் மோதலால் கட்சி இரண்டாக உடைத்தது. இது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, கட்சியின் வாக்கு வங்கியையும் சிதறடித்துள்ளது.
காரணம்
தேசியவாத காங்கிரஸ் இத்தனை காலம் அங்கு பாஜகவுக்கு எதிராகவே அரசியல் செய்து வந்த நிலையில், அஜித் பவார் அவர்கள் உடனேயே கூட்டணி அமைத்தார். மறுபுறம் சரத் பவார் தனியாக கட்சி நடத்தி வந்தார். ஆனால், வயது காரணமாக அவரால் முன்பு போலத் தீவிரமாக அரசியலில் இயங்க முடியவில்லை. இதுவே முதல் குழப்பம். அடுத்து சின்னம் தொடர்பானது.. தேர்தல் ஆணையம் என்சிபியின் 'கடிகார' சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியது. சரத் பவாருக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. இப்படி இரு வேறு சின்னங்கள் இருந்ததும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதேபோல புனேவில் கடந்த சில காலமாகவே பாஜக சீராக வளர்ந்து வருகிறது. புனே மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் பாரதிய பாஜக மெல்ல அதேநேரம் சீராக உயர்த்தி வருகிறது. மகளிர் உதவித் தொகை உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் வாக்குகளும் ஓரளவுக்கு பாஜக பக்கம் போய் இருக்கிறது.
சரிவு
மேலும், புனே என்பது மராத்தி இன மக்கள் இருக்கும் பகுதி. மும்பையில் கூட பலதரப்பட்ட மக்கள், அதாவது வேறு மாநில மக்கள் அதிகம் வசிப்பார்கள். ஆனால், புனேவில் அதிகளவில் மராத்தியர்களே இருக்கிறார்கள். அந்த மராத்தி வாக்குகளும் கூட சரத் பவாருக்கு கிடைக்காமல் பாஜகவுக்குப் போனதே இன்னொரு முக்கிய காரணம்.. மும்பையிலும் மராத்தி வாக்குகள் கணிசமாக பாஜகவுக்குப் போன நிலையில், புனேவிலும் அதுவே தான் நடந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அங்கு சரத் பவார் செல்வாக்கு குறைந்தே வருகிறது.
உள்ளூர் தலைவர்கள்
2024 சட்டசபை தேர்தலிலேயே புனேவில் என்சிபி சரிவு தொடங்கி இருந்தது. அங்கு ஒட்டுமொத்த மாவட்டத்தில் ஒரே இரு தொகுதியில் மட்டுமே என்சிபி வென்றிருந்தது. இதனால் சரத் பவார் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். பல முக்கிய உள்ளூர் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கட்சி தாவினர். இதனால் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆள் இல்லாமல் போனது.
முன்பே குறிப்பிட்டது போல சரத் பவார் இப்போது வயது மூப்பு காரணமாகத் தினசரி கட்சிப் பணிகளில் ஈடுபடுவதில்லை. அவரது மகள் சுப்ரியா சுலே தான் வேலைகளைக் கவனிக்கிறார். இருப்பினும், கட்சியில் அவருக்குச் செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது. சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேயை முன்னிறுத்தியதும், அஜித் பவாரை ஓரங்கட்டியதும் குடும்பத்திற்குள் மட்டுமல்லாமல், வாக்காளர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காரணங்களாலேயே சரத் பவார் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்து வருகிறது.












Click it and Unblock the Notifications