ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க சொன்னார்.. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது முன்னாள் கமிஷ்னர் புகார்!
மும்பை: மும்பையில் இருக்கும் பிஸினஸ்மேன்களிடம் இருந்து மாதம் மாதம் 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்கும்படி மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் நெருக்கடி கொடுத்ததாக மும்பை முன்னாள் கமிஷ்னர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடி பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது என்ஐஏ அதிகாரிகள் இதை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் தற்போது மும்பையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த காரை அந்த போலீஸ் அதிகாரி நிறுத்தி இருக்கலாம் என்று என்ஐஏ சந்தேகப்படுகிறது. இதற்கான சிசிடிவி கேமரா ஆதாரங்கள் சிலவும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவரே இந்த வழக்கில் சிக்கி இருப்பதால்.. இன்னொரு பக்கம் மும்பையின் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக பரம் பீர் சிங் நீக்கப்பட்டார்.
பரம் பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது திடுக்கிடும் புகார்களை வைத்துள்ளார். அதன்படி மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்கிற்கு எதிராக இவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் மகாராஷ்டிராவில் இருக்கும் பிசினஸ்மேன்களிடம் இருந்து மாதமாதம் 100 கோடி ரூபாய் மாமூல் வாங்க வேண்டும் என்று தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வேசுக்கு இவர் இப்படி நெருக்கடி கொடுத்துள்ளார் என்று இடமாற்றம் செய்யப்பட்ட கமிஷ்னர் பரம் பீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா மாதமும் 100 கோடி ரூபாய் மாமூல் வந்துவிட வேண்டும். மும்பையில் இருக்கும் கடைகள், நிறுவனங்களிலும் மாமூல் வாங்க வேண்டும் என்று அணில் தேஷ்முக் கூறியதாக முன்னாள் கமிஷ்னர் பரம் பீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக பரம்பீர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கடிதம் மூலம் புகார் அளித்ததாக கூறியுள்ளார்.
முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடி குண்டு வைக்கப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்.. பரம் பீர் சிங் போட்டு இருக்கும் இந்த குண்டு மும்பை அரசியலை உலுக்கி உள்ளது.
பரம் பீர் சிங் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.. அவர் மீது கடுமையான விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் தேஷ்முக் கூறியுள்ளார். இந்த நிலையில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது.