"வதந்திகளை நம்பாதீர்கள் நலமாக உள்ளேன்.." ஐசியூ-வில் அனுமதி என வெளியான தகவலுக்கு ரத்தன் டாடா விளக்கம்
மும்பை: பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நள்ளிரவில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்போது அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார்.
நமது நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. அவருக்கு இப்போது வயது 86.. டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது இந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் அதில் ரத்தன் டாடா பங்கு முக்கியமானது.

இதற்கிடையே ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அங்கு ஐசியு பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டது.
வெளியான தகவல்: நள்ளிரவு 12.30- 1 மணியளவில் ரத்தன் டாடா மருத்துவமனைக்குக் கொண்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவருடைய ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்குக் குறைந்ததே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டது. மேலும், வல்லுநர் குழு அவரது நிலையைக் கண்காணித்து வருகிறதாகவும் கூறப்பட்டது.
இந்த தகவல் தீயாகப் பரவிய நிலையில், இது குறித்து ரத்தன் டாடாவே விளக்கமளித்துள்ளார். தனது உடல்நிலை நன்றாகவே இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா விளக்கம்: இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன். இந்த தகவல்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளேன்.
என்னை நினைத்துக் கவலைப்பட எந்தவொரு காரணமும் இல்லை. நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.. தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ரத்தன் டாடா: இந்தியாவின் தொழிற்துறையின் முகம் என்றே ரத்தன் டாடாவை சொல்லலாம். டாடா குழுமத்தை முதலில் சிறிய பிஸ்னஸாக ஆரம்பித்த ஜம்செட்ஜி டாடாவின் கொள்ளு பேரன் தான் ரத்தன் டாடா.. இப்போது டாடா சன்ஸ் குழுமம் வாகனம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், எஃகு, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள் மற்றும் முதலீடுகள், விமானப் போக்குவரத்து, இ-காமர்ஸ் என பல துறைகளில் கால் பதித்துள்ளது.
விருதுகள்: கடந்த 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை என இரண்டு முறை டாடா குழுமத்தின் தலைவராகவும் ரத்தன் டாடா இருந்துள்ளார். டாடா நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து விலகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட டாடா என்றாலே இந்தக் காலத்துத் தலைமுறையினருக்கு ரத்தன் டாடா முகமே நினைவுக்கு வரும். 2008இல், அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. முன்பு 2000ம் ஆண்டில் அவர் பத்ம பூஷன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications