ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறது ஆர்பிஐ! நிர்வாக குழு அதிரடி முடிவு
Recommended Video
மும்பை: மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு உபரி நிதியை வழங்குவது பற்றி ஆராய்ந்து அறிக்கை அளித்திருந்தது.

6 பேர் கொண்ட இந்த குழுவின் அறிக்கையில், ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் உபரி நிதியை சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்கலாம் எனவும் இதனை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு கொடுத்துவரலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆர்பிஐ நிர்வாகக் குழு கூட்டத்தில், இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுக்கு உபரி நிதியை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உபரித் தொகை என்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2018-19) 1.25 சதவீதம் அளவுக்கான மதிப்புள்ளது. எனவே, நாடு இப்போதுள்ள பொருளாதார மந்த நிலையில் இருந்து ஓரளவுக்கு மீண்டு, உயர் வளர்ச்சி விகிதத்தை அடையத் தேவையான கணிசமான பங்களிப்பாக இந்த நிதி இருக்கும்.
நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் நிதி பற்றாக்குறையாக இருக்கும் என அரசு கணித்துள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ஆர்பிஐ வழங்கும் நிதி ஓரளவுக்கு உதவக்கூடும்.












Click it and Unblock the Notifications