ரத்த குளியல் போடும் இந்திய ஐடி பங்குகள்.. பின்னால் உள்ள டிரம்ப் கனெக்ஷன்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்
மும்பை: அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக மாறி வரும் சூழலில், இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நமது இந்தியப் பங்குச்சந்தைகள் இதனால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டின் டாப் ஐடி நிறுவனங்களின் பங்குகளும் கூட மிக மோசமாகச் சரிந்துள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், டிரம்ப் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடவடிக்கை எடுத்து வருகிறார். டிரம்பே கூட அமெரிக்கா இப்போது ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணித்து வருவதாகவும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் கவலை இல்லை என்பது போலவும் சொல்லியிருந்தார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை அச்சம் என்பது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய நிறுவனங்கள்
அதிலும் குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகள் உச்ச மதிப்பில் இருந்து கணிசமாகச் சரிந்துள்ளன. அதிலும் ஏதோ இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிறுவனங்கள் சரியவில்லை. டாப் நிறுவனங்களின் பங்குகளும் கூட கடும் சரிவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக சில நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 33% வரை சரிந்துள்ளன. அமெரிக்கா பொருளாதாரம் குறித்த அச்சம், ரேடிங் பாதிப்பு, வருவாய் குறையும் என்ற அச்சம் ஆகியவையே இதற்குப் பிரதான காரணமாக உள்ளது.
இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட இந்தியாவின் டாப் 10 ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. அதிகபட்சமாக எல்.டி.ஐ.மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் பங்குகள் 33% வரை சரிந்துள்ளது. குறைந்தபட்சமாக விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 16% சரிந்துள்ளன. பொதுவாக பங்குகளின் விலை இப்படி தாறுமாறாக குறைந்தால் அதை ரத்த குளியல், அதாவது ஆங்கிலத்தில் Blood Bath என குறிப்பிடுவார்கள்.
கடும் சரிவு
இப்படி பங்குகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஐடி நிறுவனங்களுக்கு அது மிகப் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. கடந்த ஜனவரி முதல் மும்பை பங்குச்சந்தையில் ஐடி குறியீடு 19% சரிந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஜனவரி முதல் 14.6% சரிந்து ரூ.3,512.35ஆக உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 16.12% சரிந்து ரூ.1,579.25ஆக உள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 16% சரிந்து ரூ.1,434.30ஆகவும் ஹெச்.சி.எல் டெக் நிறுவனப் பங்குகள் 20% சரிந்து ரூ.1,534.55ஆகவும் எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனப் பங்குகள் 21.2% சரிந்து ரூ.4,466.70ஆகவும் உள்ளன.
எப்போதும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஐடி நிறுவனங்களின் பங்குகளின் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஆனால், இந்த முறை அது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது.
காரணங்கள் என்ன
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சர்வதேச வர்த்தக போர், பணவீக்கம் காரணமாக அமெரிக்காவில் பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் கணிசமாக அமெரிக்காவில் இருந்தே வருகிறது. இதனால் அமெரிக்கா பொருளாதாரத்தில் எதாவது சிக்கல் ஏற்படும் போது அது இந்திய ஐடி நிறுவனங்களை நேரடியாகவே பாதிக்கும். இது முதல் சிக்கல்.!
அதேபோல அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை நாஸ்டாக் கடுமையாகச் சரிந்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்படும் இந்த நிலை இந்திய ஐடி பங்குகளைப் பாதிக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் கூட டெஸ்லா பங்குகள் கடுமையாகச் சரிந்தால் நாஸ்டாக் பங்குகள் 4% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
எப்போது சீராகும்?
இதுபோல பல சிக்கல்கள் இருப்பதால் முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்களுக்கான வருவாய் வளர்ச்சி குறித்த கணிப்புகளைக் குறைத்துள்ளது. முன்பு கணிக்கப்பட்ட வருவாயில் இருந்து ஒன்று முதல் 2 சதவிதிகம் வரை வருவாய் குறையும் எனக் கூறப்படுகிறது. சர்வதேச சிக்கல்கள் இப்போதைக்குச் சரியாகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதால் இதே நிலையே வரும் காலங்களிலும் நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications