காத்திருப்புக்கும், புரிதலுக்கும் நன்றி.. சீக்கிரமே குட் நியூஸ் வரும் - கங்கனா ரனாவத்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடித்து வெளியாகவுள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2006 ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதுவரை 4 தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் பாஜக எம்பியாக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் மணிகர்னிகா - ஜான்சி ராணி படத்தை கிறிஸ் ஜகர்லாமுடியுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு இயக்கினார். அதைத்தொடர்ந்து, நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை முழுக்க முழுக்க கங்கனா ரனாவத்தே இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு எமர்ஜென்சி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்கள், அரசியல் நடவடிக்கைகள், இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன. இந்த திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது. படத்தின் டிரைலர் கடந்த 14ம் தேதி வெளியானது. டிரைலர் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது. இதுவரை சென்சார் போர்டில் இருந்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்னும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற உத்தரவால் எமர்ஜென்சி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து படக் குழுவினர் தணிக்கை அதிகாரிகளிடம் பேசிய நிலையில், ஒவ்வொரு சமூகத்தினரது உணவர்வுகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது.
எமர்ஜென்சி படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதால், சீக்கிய அமைப்பினா் இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரியுள்ளனா். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சா்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ள நிலையில், அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சீக்கிய விவசாயிகளும் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இந்திராகாந்தி கொலை, பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்ற சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்தக் கூடாது என்று தங்களுக்கு மிரட்டல் வருவதாகவும், படத்தில் என்ன காட்சிகள் வருகிறது என்ற கேள்விகளும பலமாக எழுவதாகவும், எதையும் என்னால் நம்ப முடியாத தருணமாக உள்ளது, இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று அண்மையில் கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தள பக்கத்தில் எமர்ஜென்சி திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெறுவதற்காக காத்திருக்கிறோம். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களுடைய புரிதலுக்கும், காத்திருப்புக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications