உபி வன்முறை.. விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மகாராஷ்டிர அரசு.. இன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்
மும்பை: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்திற்கு மகாராஷ்டிரா அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் மகாராஷ்டிராவில் இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் முடிந்த பிறகு விவசாயிகள் அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சருக்குச் சொந்தமான கார் உட்பட 3 கார்கள் விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் வேலைநிறுத்தம்
மத்திய அமைச்சரின் மகனே காரை ஓட்டி வந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். நீண்ட தாமதத்திற்குப் பிறகு அமைச்சரின் மகனை நேற்று முன்தினம் உபி போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் பந்த் இல்லை
நள்ளிரவில் தொடங்கிய இந்த பந்திற்கு மகாராஷ்டிர கூட்டணி அரசியல் இடம் பெற்றுள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் போதிலும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இது மகாராஷ்டிர அரசு சார்பில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் இல்லை என்றும் கட்சிகளே இதற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மகாராஷ்டிர அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. உபி-இல் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்கள் இந்த பந்திற்கு ஆதரவு தர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு அமைப்புகள் ஆதரவு
தேசியவாத காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு தொடர் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாலை 4 மணி வரை கடைகளை மூட முடிவு செய்துள்ளதாகச் சில்லறை வர்த்தகர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

பாஜக சாடல்
வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதேநேரம் இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதேஷ் ரானே தனது ட்விட்டரில், "நாளை ஆளும் கூட்டணிக் கட்சிகள் எந்த கடையையும் மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. அவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், பாஜக தொண்டர்களை எதிர்கொள்ள நேரிடும். இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல!!" எனப் பதிவிட்டுள்ளார்,












Click it and Unblock the Notifications