தடுப்பூசி பக்க விளைவால் மகள் மரணம்? சீரம் நிறுவனத்திடம் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை வழக்கு
மும்பை: தடுப்பூசி போட்டதில் மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திலீப் லுனாவத் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோருக்கு பாம்பே உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீரம் அல்லது பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டன.
கடந்த 2021ஆம் ஆண்டு முதலே சீரம் நிறுவனம் பல்லாயிரம் கோடி வருமானத்தில் திளைக்கிறது. காரணம் கொரோனா தடுப்பூசி விற்பனைதான். 1966ஆம் ஆண்டு ரூ.5,00,000 முதலீட்டில் சீரம் தடுப்பூசி நிறுவனத்தைத் தொடங்கினார் சைரஸ் பூனாவாலா. போலியோ, மூளைக்காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்ட பல நோய்களுக்கான தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு சீரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும்.

கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிஷீல்டின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததாகக் கூறி திலீப் லுனாவத் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோருக்கு பாம்பே உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மாணவி சினேகல்
தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் மாணவி பெயர் சினேகல். இவர் நாசிக் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி போட்டது தான் எனக்கூறி அவரது தந்தை திலீப் லுனாவத் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "எனது மகளுக்கு கல்லூரியில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. சில நாட்களில் தீவிர தலைவலி, வாந்தியால் பாதிக்கப்பட்டாள். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தாள்.

கோவிஷீல்டு தடுப்பூசி
2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்து, இந்தியா மற்றும் பிற மூன்றாம் உலக நாடுகளுக்கு 100 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்தியது. திலீப் லுனாவத் தனது மனுவில் மற்ற பிரதிவாதிகளாக இந்திய யூனியன், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டாக்டர் விஜி சோமானி மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஆகியோர் அடங்குவர்.

தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம்
ஔரங்காபாத்தில் வசிக்கும் திலீப் லுனாவத், தனது மகள் தமங்கானில் உள்ள SMBT பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவராகவும் மூத்த விரிவுரையாளராகவும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். நிறுவனத்தில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, தனது மகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார்.

உறுதியளித்த மருந்து நிறுவனங்கள்
தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், அவரது உடலுக்கு ஆபத்து அல்லது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும் தனது மகளுக்கு உறுதியளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் சோமானியும் குலேரியாவும் பல நேர்காணல்களை அளித்து தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று மக்களுக்கு உறுதியளித்ததாக லுனாவத் கூறினார்.

தடுப்பூசி சான்றிதழ்
ஜனவரி 28, 2021 தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை இணைத்துள்ளார். "கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளால் அவர் மார்ச் 1, 2021 அன்று இறந்தார். அக்டோபர் 2, 2021 அன்று மத்திய அரசின் சொந்த எதிர்மறையான நிகழ்வுகளைத் தொடர்ந்து நோய்த்தடுப்பு (AEFI) அறிக்கையில் இது பிரதிபலித்தது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி பக்க விளைவு
தடுப்பூசி போட்டதன் பக்க விளைவால் தான் அவள் உயரிழந்து உள்ளார். எனவே கோவிஷீல்டு மருந்து தயாரித்த சீரம் நிறுவனம் ரூ.1,000 கோடி இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் கங்காபுர்வாலா மற்றும் மாதவ் ஜாம்தார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது பதிலளிக்குமாறு சீரம் நிறுவனம், மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications