சரத்பவார் அதிரடி- 5 ‘தலைகள்’ டிஸ்மிஸ்- 9 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம்!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார், அவருடன் இணைந்து அமைச்சராக பதவியேற்ற 8 எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகிய எம்.பிக்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யவும் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீரென ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஆளும் பாஜக அரசில் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்; அவருடன் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அத்துடன் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அஜித் பவார் கூறியிருந்தார்.

இந்நிலையில் கட்சி தாவியவர்களை கட்டம் கட்டுதல், தகுதி நீக்கம் செய்தல் நடவடிக்கைகளை சரத்பவார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அக்கட்சியின் செயல் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான பிரபுல் பட்டேல், மற்றொரு எம்பியான சுனில் தட்கரே, மூத்த தலைவர்கள் சிவாஜிராவ் கர்ஜே, விஜய் தேஷ்முக், நரேந்திர ரானே ஆகியோரை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தார்.
மேலும் அஜித்பவார் உட்பட பாஜக அரசில் இணைந்த 9 பேரை கட்சித் தாவலுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகரிடம் கடிதம் தரப்பட்டுள்ளது. அதேபோல எம்பிக்களான பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோரை தகுதி நீக்கம் செய்யவும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications