தேசியவாத கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் திடீர் ராஜினாமா- தொண்டர்கள் அதிர்ச்சி கதறல்!
மும்பை: தேசியவாத கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீரென அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத் பவார் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது என கண்ணீரும் கம்பலையுமாக தேசியவாத கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவாரும் ஒருவர். 1958-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் சரத்பவார். அரசியலில் அத்தனை உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள், பிரிவுகளின் போது சரத் பவார் என்கிற பெயரும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. காங்கிரஸ் கட்சியில் கலகக்காரராகவே இருந்தார் சரத்பவார். மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்; மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண்துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.
1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் நீண்ட காலம் தனிக்கட்சியை தக்க வைத்தவர்களில் சரத் பவார் முக்கியமானவர். ஆனால் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து கொண்டு காங்கிரஸுக்கு நட்பு சக்தியாகவும் இருந்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் பாஜகவுடனான நீண்ட்கால கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டு பரம எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்ததில் சரத் பவாரின் பங்கு மிக முக்கியமானது. 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பின்னர் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் சரத் பவார் ரோல் தவிர்க்கப்பட முடியாததாக இருக்கிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த அணியை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திடீரென சரத்பவார் தாம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
#WATCH | Supporters of NCP chief Sharad Pawar protest against his announcement to step down as the national president of NCP. pic.twitter.com/LsCV601EYs
— ANI (@ANI) May 2, 2023
இது தொடர்பாக சரத்பவார் இன்று கூறியதாவது: நான் தேசியவாத கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். என்னுடைய ராஜ்யசபா பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு இருக்கிறது. இனி எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். மகாராஷ்டிரா மற்றும் தேச நலன் சார்ந்த விஷயங்களில் தீவிர கவனம் செலுத்துவேன். எந்த ஒரு கூடுதல் பொறுப்பையும் நான் எடுத்துக் கொள்ளமாட்டேன். நான் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகவில்லை. இவ்வாறு சரத்பவார் கூறினார்.
இதனிடையே தேசியவாத கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகும் முடிவுக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சரத் பவார் தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என கண்ணீருடன் அவரை நேரில் சந்தித்து என்சிபி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications