சிவசேனா, வில் அம்பு சின்னம் யாருக்கு?.. முடிவு எடுக்க வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு கோர்ட் உத்தரவு
மும்பை: சிவசேனா அணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, கட்சி மற்று கட்சியின் வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை வருகிற வியாழக்கிழமை வரை முடிவு எடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரேயின் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.
இந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக 40 எம்.எல்.ஏ.க்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார்.
ஏக்நாத் ஷிண்டே கோட்டையில் இருந்து துவக்கம்.. மகாராஷ்டிரா முழுவதும் யாத்திரை.. உத்தவ் தாக்கரே அதிரடி
யார் உண்மையான சிவசேனா அணி
தொடர்ந்து உத்தவ் தாக்கரேயை ஆட்சியில் இருந்து கவிழ்த்த ஏக்னாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணியை உருவாக்கினார். தொடர்ந்து எக்னாத் ஷிண்டே மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று ஏக்னாத் ஷிண்டே அணியினரும், உத்தவ் தாக்கரே அணியினரும் தொடர்ந்து கூறி வந்தது. தொடர்ந்து இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
விசாரணை
உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்னாத் ஷிண்டே தாக்கல் செய்த இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியினர் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு ஏக்னாத் ஷிண்டே சிவசேனா அணியினர் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் உண்மையான சிவசேனா யார் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க உத்தரவிடுமாறும் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்
இந்த நிலையில், இந்த விவகாரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பாக முடிவு எடுக்க 8 கேள்விகளையும் வகுத்துள்ளது. மேலும், கட்சி சின்னத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வரும் வியாழக்கிழமை விசாரிக்க உள்ளது.
வியாழக்கிழமை பட்டியலிடுங்கள்
விசாரணையின் போது தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள், கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோலி ஆகியோர் கூறுகையில், "இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு வரும் வியாழக்கிழமை பட்டியலிடுங்கள். சின்னம் தொடர்பாக தேர்தலாணையத்தின் நடைமுறைகள் குறித்து அரசியல் சாசன அமர்வு துவக்கத்திலேயே முடிவு செய்யும" என்று தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏக்னாத் ஷிண்டே அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.