பாவமாகிடுச்சு! ஷிண்டே கலந்துகொண்ட நிகழ்ச்சி! கோமியத்தை தெளித்த தாக்கரே ஆதரவாளர்கள்! உச்சக்கட்ட மோதல்
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் மோதல் தொடரும் நிலையில், தாக்கரே ஆதரவாளர்கள் ஷிண்டே தரப்பிற்கு எதிராக புதிய போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தாக்கரே தலைமையில் இருந்த கூட்டணி அரசை சிவசேனா எம்எல்ஏக்களே கவிழ்த்தனர்.
ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இடையேயான மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர்.

சிவசேனா மோதல்
கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவு ஷிண்டே தரப்பிற்கு இருப்பதால், அவர்கள் மீது தாக்கரேவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. பாஜக உடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதல்வரானது மட்டுமின்றி, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும் கட்சி அலுவலகம் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி போர்க்கொடி தூக்கினார்.

கோமியம்
இது தாக்கரே ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்தது, அவர் கிளம்பிய நிலையில், தாக்கரே ஆதரவாளர்கள் அந்த இடத்தில் மாட்டின் கோமியத்தைத் தெளித்து நூதன போராட்டம் நடத்தினர்

பரபர குற்றச்சாட்டு
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஷிண்டே நிகழ்ச்சி நடந்த இடத்தில் அவர்கள் கோமியத்தைத் தெளித்து, ஷிண்டேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஷிண்டே முகாமில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் ₹ 50 கோடி கொடுத்தாலேயே அவர்கள் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இது தொடர்பாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு ஷிண்டே முகாம் இன்னும் பதிலளிக்கவில்லை.

தொடரும் மோதல்
சிவசேனா கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பு தலைவர்களும் தங்கள் பேட்டிகளில் மற்ற தரப்பைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாகக் கட்சி அலுவலகம் சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என்று ஷிண்டே தரப்பு கூறிய பின்னர் மோதல் உச்சமடைந்தது. அதேபோல வீதிகளிலும் இரு தரப்பு தண்டர்கள் தொடர்ச்சியாக மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது
மும்பை தாதரில் சனிக்கிழமை இரவு விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதும் இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். மோதலுக்கு மற்ற தரப்பே காரணம் என்று இருவரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து தாக்கரே ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications