சிவசேனா சஞ்சய் ராவத் இன்று அமலாக்கப் பிரிவு முன் ஆஜராவாரா? கைது செய்யப்படுவாரா? பரபர மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனடிப்படையில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு சஞ்சய் ராவத் ஆஜராவாரா? அல்லது கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
மகாராஷ்டிரா அரசியலில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ந் தேதி வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது. அத்துடன் மகாராஷ்டிரா துணை சபாநாயகர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை பல்வேறு வகைகளில் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறது. ரு1,034 கோடி நில மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
சிவசேனா சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-என் தலையையே வெட்டினாலும் அணி மாறமாட்டேன் என சபதம்
மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்துக்கு மிக நெருக்கமான பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துகள் பலவற்றையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருக்கிறது.
ஆனால் எனக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பதாக அறிந்தேன். நல்லது. மகாராஷ்டிரா அரசியலில் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பால்தாக்கரேவின் சிவசேனாக்கள் மிகப் பெரிய யுத்தம் நடத்தி வருகிறோம். என்னை தடுத்து நிறுத்தும் சதி இது. நீங்கள் என்ன செய்தாலும் நான் குவஹாத்தி பாதையில் பயணிக்க மாட்டேன் (அதிருப்தி கோஷ்டிக்கு தாவுதல்).. என் தலையையே வெட்டினாலும் அது நடக்காது.. என்னை கைது செய்து கொள்ளலாம்! என சஞ்சய் ராவத் எச்சரித்திருந்தார். இதனால் இன்று அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் சஞ்சய் ராவத் ஆஜராவாரா? அல்லது அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.