அமைச்சர் மீது போலீஸ் குற்றச்சாட்டு: மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் பிளவு!
மும்பை: மகாராஷ்டிராவில் காவல்துறை அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க லஞ்சம் வசூலிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் கூறியதாக காவல்துறை அதிகாரி பரம்வீர் சிங் குற்றம்சாட்டினார்.
இந்த புகாரையடுத்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த அணில் தேஷ்முகை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளதால் சிவசேனா-காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுளள்து.
உள்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா கடும் ஆட்டம் போட்டு வருகிறது. அங்கு சுமார் 28,000 அளவுக்கு தினசரி பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவின் மொத்த பாதிப்பில் 80% அளவுக்கு அங்கு பாதிப்பு நிலவி வருகிறது. இது ஒருபுறம் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா-காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தினாலும், அங்கு கூட்டணிக்குள் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது காவல்துறை அதிகாரி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு.
அம்பானி வீட்டு முன்பு நின்ற கார்
மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மும்பையை சேர்ந்த காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை ஏன்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றப்பட்டார். அப்போது கருத்து தெரிவித்த அணில் தேஷ்முக் '' பரம்வீர் சிங்குடன் இருந்த அதிகாரிகள் பெரும் தவறு செய்ததால், அவர் மாற்றப்பட்டார் என்று கூறினார்.
ரூ.100 கோடி லஞ்சம் வசூல்
இதன்பின்புதான் தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது பரம்வீர் சிங் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்தார். மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீர் சிங் எழுதிய கடிதத்தில், 'மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என்று சச்சின் வஜேவிடம் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் கூறினார். இதில் பாதி தொகையை மும்பையில் உள்ள பார்கள், உணவகங்கள் போன்றவற்றில் இருந்து வசூலித்து கொள்ளலாம் என்று கூறிய அணில் தேஷ்முக் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை தனது வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்'' என்று குண்டை தூக்கிப் போட்டார் பரம்வீர் சிங்.
கூட்டணிக்குள் குழப்பம்
தற்போது அணில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டால் சிவசேனா-காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று அணில் தேஷ்முக் பதவி விலக வேண்டும். முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இதே முடிவில்தான் உள்ளார் என்றார். மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவு தலைவருமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ' முதல்வரும், உள்துறை அமைச்சரரும் பரம்வீர் சிங் சிங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ததால் இந்த புகார் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
இன்று முக்கிய முடிவு
உள்துறை அமைச்சரின் ராஜினாமாவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், முதல்வர் அவரை பதவி நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் வருவதால் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு உத்தவ் தாக்கரே தள்ளப்பட்டுள்ளார். சிவசேனா தலைவர்களுக்கும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவாரிற்கும் இடையே இன்று மாலை டெல்லியில் ஒரு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்று சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதில் அணில் தேஷ்முக் விவகாரம் குறித்து பேசப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் முக்கிய முடிவு தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.