ரூ.1,034 நில மோசடி: அமலாக்கப் பிரிவு முன்பு ஆஜரானார் சிவசேனாவின் 'சவுண்ட் மேன்' சஞ்சய் ராவத்
மும்பை: ரூ.1,034 கோடி நில மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார்.
மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்துக்கு மிக நெருக்கமான பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துகள் பலவற்றையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது.

சஞ்சய் ராவத் ஆவேசம்
இதனை கடுமையாக விமர்சித்திருந்தார் சஞ்சய் ராவத். அப்போது ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்ட சஞ்சய் ராவத், எனக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பதாக அறிந்தேன். நல்லது. மகாராஷ்டிரா அரசியலில் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பால்தாக்கரேவின் சிவசேனாக்கள் மிகப் பெரிய யுத்தம் நடத்தி வருகிறோம். என்னை தடுத்து நிறுத்தும் சதி இது. நீங்கள் என்ன செய்தாலும் நான் குவஹாத்தி பாதையில் பயணிக்க மாட்டேன் (அதிருப்தி கோஷ்டிக்கு தாவுதல்).. என் தலையையே வெட்டினாலும் அது நடக்காது.. என்னை கைது செய்து கொள்ளலாம் எனவும் கூறியிருந்தார்.

இன்று ஆஜராக சம்மன்
மேலும் தாம் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக கால அவகாசம் கோரியிருந்தார் சஞ்சய் ராவத். 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு வருவதாக தமது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார் சஞ்சய் ராவத். இதனை பரிசீலித்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஜூலை 1- ந் தேதி இன்று ஆஜராக சஞ்சய் ராவத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது.

சஞ்சய் ராவத்தின் விமர்சனங்கள்
இதனையடுத்து இன்று அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆஜரானார் சஞ்சய் ராவத். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்ட போது, பாஜகவையும் அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் கருத்துகளை முன்வைத்தவர் சஞ்சய் ராவத். சிவசேனாவின் இந்த வீழ்ச்சிக்கு சஞ்சய் ராவத்தின் போக்குகள்தான் காரணம் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன

இன்று யாரும் வராதீங்க
முன்னதாக அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக இருப்பது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது: இன்று நண்பகல் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக இருக்கிறேன். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகிறேன். அமலாக்கப் பிரிவு அலுவலகம் செல்லும் போது சிவசேனா தொண்டர்கள் அங்கு ஒன்று கூட வேண்டாம். என்னைப் பற்றி எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications