திடீர் திருப்பம்.. 'அவங்க' எப்போதும் எங்கள் எதிரிகள் இல்லை.. மீண்டும் கூட்டணிக்கு தூதுவிடும் பாஜக
மும்பை: சிவசேனாவுடன் கூட்டணிக்குத் தூதுவிடும் வகையில், சிவசேனா ஒருபோதும் பாஜகவின் எதிரி இல்லை என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவைப் பொருத்தவரை அங்குப் பல ஆண்டுகளாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கூட்டணி இருந்தது. பல ஆண்டுகள் நீடித்த இந்தக் கூட்டணி கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு முறிந்தது.
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

எதிரிகள் இல்லை
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைந்தது முதலே, அம்மாநில பாஜக தலைவர்கள் அரசுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். குறிப்பாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "சிவசேனாவும் பாஜகவும் என்றுமே எதிரிகளாக இருந்ததில்லை.

தனித்து விட்டுவிட்டார்கள்
அவர்கள் எங்கள் நண்பர்கள் தான். ஆனால் எங்களுடன் இணைந்து யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அப்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்து, எங்களைக் கைவிட்டுள்ளனர். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்தவொரு சூழலிலும் நிலைமைக்கு ஏற்றப்படி முடிவுகள் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ்
மகாராஷ்டிராவில் சமீப நாட்களாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசு தனது அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் கடந்த வாரம் நேரில் சந்தித்தார்.

காங்கிரஸ்
அதேநேரம் காங்கிரஸ் சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. இருப்பினும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவசேனா உடனான கூட்டணி நீடிக்கும் என்பதைக் காங்கிரஸ் தெளிவுபடுத்தியிருந்தது. மகாராஷ்டிர அரசியலில் நிலவும் இந்த தெளிவற்ற தன்மையைப் பயன்படுத்தி பாஜக, சிவசேனா கட்சியுடன் தனது கூட்டணியைப் புதுப்பித்துக் கொள்ளக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications