'இனி நீங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கலாம்..' வேளாண் சட்டம் ரத்து.. சோனு சூட் நெகிழ்ச்சி
மும்பை: மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்துள்ளதைப் பல பாலிவுட் பிரபலங்களும் வரவேற்றுள்ள நிலையில், நடிகை கங்கனா ரனாவத் மட்டும் விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனைக் காக்கக் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறினாலும், இதற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த போராட்டம் பல மாதங்களாகத் தொடர்ந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்கத் தலைவர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

விவசாய சட்டங்கள் ரத்து
விவசாய சட்டம் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது எனப் பல மத்திய அமைச்சர்களும் விவசாய தலைவர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் நேற்று குரு நானக் ஜெய்ந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், நாட்டு மக்களிடையே மன்னிப்பையும் அவர் கேட்டுக்கொண்டார்.

சோனு சூட் வரவேற்பு
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வெளியானவுடன் அவரை பல அரசியல் தலைவர்களும் பாலிவுட் பிரபலங்களும் பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது ஒரு அற்புதமான செய்தி! விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி, . அமைதியான போராட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை எழுப்பிய விவசாயிகளுக்கு நன்றி. ஸ்ரீ குருநானக் ஜெயந்தியன்று நீங்கள் உங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஊர்மிளா மடோன்கர் சாடல்
நடிகையும் அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்கர், "எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெறப் பேரார்வமும், கொதிக்கும் ரத்தமும் தேவை. எண்ணங்கள் உறுதியானதாக இருந்தால் அந்த வானமும் தரைக்கு வரும். விவசாய சகோதர சகோதரிகளுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். தியாகிகளான விவசாயிகளுக்கு வீர வணக்கம்" எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல பாலிவுட் பிரபலங்களான டாப்சி, குல் பனாக், தியா மிர்சா உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

ரன்தீப் ஹூடா கருத்து
அதேபோல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, "நாட்டின் நல்லிணக்கத்திற்காக எதிராயினர் ஒன்றுபடுவதே உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்! அமைதியை ஏற்படுத்த விவசாய சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அனைவரும் கொண்டாடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். இப்படிப் பல பாலிவுட் பிரபலங்களும் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

ஜிகாதி தேசம்
அதேநேரம் நடிகை கங்கனா ரனாவத் இதற்கு நேர்எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர், "வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது. நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பதிலாகச் சாலைகளில் உள்ளவர்கள் சட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கினால் இதுவும் ஜிகாதி தேசம் தான். இப்படி நடக்க வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் இந்தப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications