இவரையும் விட்டு வைக்கல.. ‘டீப் ஃபேக்’ பயன்படுத்தி போலி வீடியோ.. ஆதங்கத்துடன் சச்சின் வைத்த கோரிக்கை
மும்பை: டீப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேம் ஒன்றை விளம்பரப்படுத்துவதாக போலியான வீடியோ பரப்பப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு ஆதங்கப்படுள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி வேலைகளும் நடப்பது அதிகரித்துள்ளது. அதிலும் டீப் ஃபேக் எனப்படும் தொழில் நுட்ப உதவியால் பிரபலங்களின் முகத்தை தத்ரூபமாக பயன்படுத்தி ஆபாச வீடியோக்களும் போலியான தகவல்களும் பரப்பப்படுகின்றன.

பிரபலங்களின் முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் வீடியோவுடன் டீப் ஃபேக் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலமால மார்பிங் செய்து உண்மையான வீடியோபோல பகிர்ந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து ஆபாச போலி வீடியோ டீப் பேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியானது. இதற்கு ராஷ்மிகா மந்தனாவும் தனது கடும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
டீப் ஃபேக் தொழில் நுட்பம்: இது போல போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது. அதாவது, போலி வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தது. எனினும் டீப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் வீடியோக்கள் இன்னமும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
சச்சின் தெண்டுல்கர் ஆதங்கம்: அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது டீப் ஃபேக் வீடியோவுக்கு இரையாகியுள்ளார். ஒரு ஆன்லைன் கேம் தொடர்பான விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கரின் குரல் மற்றும் அவரது முகம் பயன்படுத்தப்பட்டு அந்த ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவது போல வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இது போலியானது என கூறியுள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறுகையில், "இந்த வீடியோக்கள் போலியானது. டெக்னாலஜி தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் குறித்து அதிகளவில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
விதிமுறைகள் கொண்டு வரப்படும்: இந்த நிலையில், இத்தகைய டீப் ஃபேக் வீடியோக்களுக்கு கடிவாளம் போட விரைவில் விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சச்சினின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் ராவ் கூறியிருப்பதாவது:-
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் இந்திய பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ஐடி சட்டத்தின் கீழ் கடினமான விதிகள் கொண்டு வரப்படும். சமூக ஊடக தளங்களும் 100 சதவிகிதம் இதை பின்பற்றி நடக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications